-

சொற்களும் அறியேன் சொற்களின் பொருளும் அறியேன். கவிதையும் அறியேன் உரை நடையும் அறியேன் ஆறுமுகங்களுடைய முருகன் ஒளிவெள்ளமாக என் இதயத்தில் புகுந்து நிலையாக அங்கேயே இருப்பதால் சொல்லும் பொருளும் அவனருளல் தானாகவே வெளிப்படுகிறது தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன் ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன் தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன் நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே!
நடராஜனது ஐந்து சபைகள்தான் மேலேயுள்ளது. மதுரையில் பாருங்கள் வலது பாதம் தூக்கி ஆடுகிறார். அதான் ஊருக்கெல்லாம் ஒரு வழி என்றால் மதுரைக்காரர்களுக்கு மட்டும் தனி வழி.
திரு. மௌளி அவர்கள் போனபதிவுக்கு போட்ட பின்னுட்டத்தில் "இடது பதம் தூக்கி ஆடும் நடராஜனடி பணிவோமே"என்ற பாட்டை தருமாறு கேட்டிருந்தார். இதோ படமும் கருத்தும் முன்னே பாடல் பின்னே.
சென்னைக்கு அருகில் உள்ளது திருவாலங்காடு திருத்தலம். கரைக்கால் அம்மையாருக்கு சிவபதவி அளித்த இடம். நடராஜர் எட்டு கரங்களுடன் நடனம் ஆடும் தலம் ( ரவி எட்டுகைகள் இருக்கிறதா இல்லையா எண்ணிப்பார்த்து சொல்லுங்கள்)அபய கரம்,அருள் கரம்,அதிரமுழங்கும் உடுக்கை ஒரு கரம், திரிசூலம் ஒரு கரம், மான் ஒரு கரம் அக்னி ஒரு கரம், நாகபாசம் ஒரு கரம் மற்றும் நாட்டிய முத்திரையுடன் ஒர் கரம் ஆக எட்டு கரம்
உலகத்தின் சுழற்சிதான் நடராஜரின் நடனம்.அஜபா நடனம் என்றும் கூறுவார்கள். ஐயனின் வலக்கரத்திலுள்ள உடுக்கை படைத்தல் தொழிலையும், அபய கரம் காத்தல் தொழிலையும், இடக்கரத்தில் உள்ள அக்னி அழித்தல் தொழிலையும், முயலகனின் மேல் ஊன்றிய பாதம் திரேதம் எனப்படும் மறைத்தல் தொழிலையும் , தூக்கிய குஞ்சிதபாதம் முக்திக்கு காரணமாகி அருளல் தொழிலை குறிக்கின்றது. நம் பாபநாசம் சிவன் அவர்கள்
அவனது நடனத்தை இப்படி வர்ணிக்கிறார்:-
செங்கையில் மான் தூக்கி சிவந்த மழுவும் தூக்கி
ஒரு பெண்ணை அனுதினமும் தூக்கி
கங்கையை திங்களை கருத்த சடையில் தூக்கி
இங்கும் அங்குமாய்த் தேடி இருவர் கண்டறியாத........(காலைத்தூக்கி)
நந்தி மத்தளம் கூட்ட நாரதர் யாழ் தூக்க
தோம் தோம் என்று என் தாளம் சுருதியோடு தூக்க
சிந்தை மகிழ்ந்து வானோர் சென்னிமேல் கரம் தூக்க
முந்தும் வலியுடைய முயலகன் உன்னைத் தூக்க"
மேலும் கூறுகிறார்
கஞ்ஜ மலரிதழின் விழியாள்-ஓயாக்காதலுடன் சிவகாமி மணாளநின்
சரணம்கொஞ்சும் சதங்கை கலீர் கலீரென
குழவி இளம் பிறை பளீர் பளீரென
நஞ்சம் தவழும் நீல கண்டமும் மின்ன
ஒருநங்கை கங்கை சடையில் குலுங்க-நடமாடும் ஆடல் அரசே.
இந்தப்பின்னனியில் மேலே உள்ள ஆடலரசனின் படத்தை இந்த பாடலுடன்/<"இங்கே">"> கேட்டுப் பாருங்கள். மனதில்அவனது ஆனந்த நடனம் தெரியும்.
திருவாலங்காட்டில்தான் தன்காதிலிருந்த குண்டலம் கீழே விழுந்ததாக
பாவனையுடன் சிவன்அதை இடது காலால் எடுத்து அணிய அதுபோன்று செய்ய முடியாமல் சிவகாமி தோல்வியோடு தலை குனிந்தாளாம். ஆனால் நம் சிவனின் பார்வையோ வேறு மாதிரி இருக்கிறது.காளியுடன் ஆடும்போது தோற்றுவிடும் நிலையை அடையும் தருணத்தில் எங்கே நாம் தோற்றுவிடுவோமோ என்ற அச்சத்தினால் காதிலிருக்கும் குண்டலம் கீழே விழுவதுபோல விழவைத்து (அழுகுணி ஆட்டம் ஆடி) இடது காலால் எடுத்து பின்பு உயரத்தூக்கி அதை காதில் அணிந்ததாக இப்படி கூறுகிறார்
"சுபஞ்சேர் காளியுடனாடிப் படு தோல்வி யஞ்சி திருச்செவியிலணிந்த-மணித்தோடு விழுந்ததாக மாயங்காட்டியும் தொழும்பதம் உயரத்தூக்கியும்-விரிப்ரபஞ்சம் முழுதும் ஆட்டும் நின்திருப் பதம்தஞ்சமென உனை அடைந்தேன் பரிந்தென் திண்டாட்டம் கண்டு பரிசு தரும்துரையே சபை நடுவில் தத்திமி என்று ஆடும்
சரி இனி திரு. மௌளி கேட்ட பாடலுக்கு வருவோம்.திரு. சிவன் அவர்களின் அருமையான பாடல்களுள் ஒன்று.கமாஸ் ராகத்தில் அமைந்த இடது பதம் தூக்கி என்ற பாடல்.
இறைவன் எப்படி ஆடுகின்றான் என்பதை எவ்வளவு விவரமாக வர்ணிக்கின்றார். புன்னகையோடு இடது காலை தூக்கி தில்லையிலே ஆடுகிறானாம். அவன் மட்டும் ஆடவில்லை அவனுடன் இந்தப் பூமியும் ஆடியது(சுழற்சி), தலைமேல் இருந்த கார்க்கோடகன் என்ற கொடிய பாம்பும் ஆட,பக்தர்கள்ஜெயஜெயவெனகோஷிக்க,புலிப்பாதமுனிவர்கண்குளிர்ந்து
கொண்டாட ஆடினார். ஆடியபோது ஆண்டவனின் கால் சிலம்புகள் கலீர் கலீர்என்று முழக்கமிட,தலையில் இருக்கும் பிறைச் சந்திரன் தலை இந்த பக்கமும் அந்தபக்கமும் ஆடும் போது பளீர் பளீர் என்று மின்ன, மைத்துனாரன திருமால் மத்தளம் வாசிக்க, சிவகாமி மணாளன் திருசிற்றம்பலத்தில் மகிழ்ச்சியோடு ஆடுகின்றான்

இன்று ஆருத்ரா தரிசனம். அம்பலகூத்தன் நடராஜனுக்கு மிகவும் உகந்த நாள். மார்கழிப் பௌர்ணமியுடன் கூடிய திருவாதிரை நாளில் நடைபெறும் திருவாதிரை விழாவை `ஆருத்ரா தரிசனம் என்பர். `ஆருத்ரா' என்ற சொல் `ஆதிரை' என்று மாறியதுவீட்டில் திருவாதிரைக் களியும் கதம்பகூட்டும் தயார் செய்து சாப்பிடுவார்கள்.
ஒருமுறை சேந்தனார் அளித்த களியை சிவன் ஏற்றுகொண்டார். அன்றிலிருந்து திருவாதிரைக்கு களியும் ஏழுவகைக்கூட்டும் அவித்த வள்ளிக்கிழங்கும் நைவேத்யமாகக் கொள்ளப்பட்டது. களி' என்றால் `ஆனந்தம்' என்பது பொருள். இறைவன் சச்சிதானந்த வடிவினன். அவனுக்கு ஆனந்த நடனப் பிரகாசம், ஆனந்த நடராஜன் என்ற ஒரு பெயரும் உண்டு. களி நடனம் புரியும் அவனுக்குக் களியைப் படைத்து நாமும் களிப்படைவதும் பொருத்தமே.
நாட்டில் நடராஜருக்கு முக்கியமாக ஐந்து நடனசபைகள் உண்டு.திருவாலங்காடு(ரத்தின சபை),சிதம்பரம்(கனக சபை),திருநெல்வேலி(தாமிர சபை),மதுரை(வெள்ளி சபை),குற்றாலம்(சித்ர சபை) ஆகும்.சிதம்பரத்துக்கு கனகசபை என்று பெயர்வரக் காரணம் அங்கே நடராஜர் எழுந்தருளியிருக்கும் மண்டபம் பராந்தக சோழனால் பொன்னால் வேயப்பட்டது.நடராஜர் எட்டுகைகளுடன் இடது பதம் தூக்கி ஆடுவார் மதுரையைத்தவிர மற்ற இடங்களில். மதுரையிலோ வலது பாதம் தூக்கி ஆடுகின்றார் பத்து கைகளுடன்.

கோபலகிருஷ்ண பாரதியார் தனது நந்தானார் சரித்திரத்தில் பல அருமையான பாடல்களில் தில்லை நடராஜனின் குணங்களையும் நந்தனாரது எளிமையான திட பக்தியையும் போற்றிப் பாடியுள்ளார். இவர் தியாராஜஸ்வாமிகளின் சமகாலத்தவர்.நந்தன் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர்.நடராஜனை ஆருத்ராதரிசனத்தன்று பார்க்கவேண்டும் என்று பல வருடங்களாக காத்திருப்பவர்.அவருடைய எஜமான் உத்தரவு தரவில்லை.அப்படிப்பட்ட வரை நடராஜன் தன் கருணையால் இந்த ஆருத்ரா அன்று ஆட்கொண்டு தன்னோடு ஐக்கியமாக்கிக் கொள்கிறான். தில்லைவாழ் அந்தணர்களுக்கும் கிடைக்காத பேரின்பத்தை வழங்குகிறான்.உண்மையான பக்தி ஒன்றுக்கு மட்டும்தான் அவன் வசப்படுவான் என்ற உண்மையையும் நமக்கு புலப்படுத்துகிறான்
நந்தன் கனவில் கனகசபேசன்வந்து நான் உன்னை பொன்னம்பலத்திற்கு வரச்செய்து தரிசனம் தருகிறேன் என்று உறுதி மொழிகொடுத்தும் நந்தனுக்கு சந்தேகம் தீரவில்லை.ஏனென்றால் இத்தனை நாள் தன்னை கோவிலுக்குள் நுழையவிடாத சமூகமும் எஜாமனரும் அனுமதிபார்களா என்ற பயம். அதைப் பாட்டாக வெளிப்படுத்துகிறான்.
ராகம்:சாமா தாளம்: ஆதி
பல்லவி
வருவாரோ வரம் தருவரோ எந்தன்மனம் சஞ்சலிக்குதையே எப்போது.....(வருவாரோ)
அனுபல்லவி
திருவருந் தென்புலியூர் திருச்சிற்றம்பலவாணர்குருநாதனாக வந்து குறைதீர்க்கக் கனவு கண்டேன்
இருவினை பிணிகளைக் கருவறுத்திடுகிறேன்பயப்படாதே என்று சொல்ல.....(வாருவாரோ)
சரணம்
மறையாலும் வழுத்தறியா மகிமை பெறு ந்டராஜன்நறியூறுஞ்சேவடியை நம்பினவனல்லவா
அனுதினஞ்சிவ சிதம்பரமென்ற அடிமையென்றருள் புரிந்திடவிங்கே......(வாருவாரோ)
தனக்கு வாக்கு கொடுத்தபடி தில்லை பொன்னம்பலவாணன் வருவனோ மாட்டானோ. அப்படியே வந்தாலும் தன்னோடு ஐக்கியமாக்கிக்கொள்கிறேன் என்று வாக்களித்தபடி வரம் தந்து தன்னைச் சேர்த்துக்கொள்வானோ அல்லது தான் தாழ்ந்த குலத்தவன் என்று எண்ணி தவிர்த்துவிடுவானோ என்றெல்லாம் நினைத்து அவரது மனம் சஞ்சலப்படுகிறது. குருநாதனாக வந்து எனது இந்தப்பிறவி மற்றும் முற்பிறவிகளில் உண்டான பிணிகளான பாவங்களைத் போக்கி இனி எனக்கு பிறவியே இல்லாத ஸாஸ்வதநிலையை அளிப்பேன் பயப்படாதே என்று கனவிலுறுதி மொழி அளித்த பொன்னம்பலவாணன் வருவானோ மாட்டானோ...?ஆனாலும் என்மனம் அப்படி வராமல் இருக்கமாட்டான் என்று கூறுகிறது. ஏன் தெரியுமா கனவில் சொன்னவன் யாரோ அல்ல. நான்கு வேதங்களாலும் அறுதியிட்டு உறுதியாக விளக்கமுடியாதவுனுமாகிய அந்த கனகசபாபதியின் பாதங்களை நம்பினவன் நான்.அதுவும் எப்பேர்ப்பட்ட பாதம் அது.தில்லை மூவாயிரம் முனிவர்கள் தினமும் பூசித்திடும் பாதம்,சிற்சபையில் திந்திமிதிமிதோம் என்று ஆடியபாதம்,பார்க்கப் பார்க்க திகட்டாத பாதம், எல்லையில்லாத இன்பம் அருள் செய்திடும் பாதம்.நான் தினந்தோறும் சிவ சிதம்பரம் என்றுஎப்போதும் கூறி வணங்கின அவன் அடிமை என்று என்மேல் கருணை கொண்டு அருள் புரிந்திட வராமல் இருக்கமாட்டான் என்று தன்னை தனே சமாதான்ப்படுத்திக்கொண்டு இரக்கம் குணத்தை வெளிப்படுத்தும் ராகமான சாமாவில்இந்தகீர்த்தனையை போட்டு இருப்பது கேட்பவர் மனத்தை உருகச் செய்யும்.
கீழே சென்று பாடலை கேட்டு பார்த்து மகிழுங்கள்.
திருச்சிற்றம்பலம் சிவசிதம்பரம்
யார் வேண்டுமானாலும் எந்த ஊருக்கும் வேண்டுமானாலும் போங்கள். ஆனால் தப்பித் தவறிகூட பணடர்பூர் போய்விடாதீர்கள்.அப்படியே போனாலும் சந்திராபாகா நதிக்கரையில் இருக்கின்ற விட்டோபா பாண்டுரங்கணை மாத்திரம் பார்த்துவிடாதீர்கள். இடுப்பில் இரண்டு கையையும் வைத்துக்கொண்டு நிற்கிறானே யார் தெரியுமா அவன். "படா சித்தச் சோர மனமோஹன்' அவன் தொழிலே மனங்களை கொள்ளையடிப்பதுதான். அவனை நீங்கள் பார்த்துவிட்டால் அவ்வளவுதான்
"மேரா சித்தசோர விரஜமோஹன்" உங்களுடைய மனத்தையும் அபஹரித்துவிடுவான். ஓ.ஸ் அருணின் இந்த அபங்கம் "விட்டல.... விட்டல...'மிக அருமையானது.பாண்டுரங்கனின் கோவிலில் 24 மணிநேரமும் விட்டல விட்டல என்று நாமசங்கீர்த்தனம்தான்.கேட்டுத்தான்,பார்த்துத்தான் ரசியுங்களேன்.

.அவதாரம்:- 11/12/1882 மறைவு;- நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை