Friday, July 17, 2009

பட்டம்மாள் என்கிற பாட்டம்மாள்

திருமதி பட்டம்மாள் என்கிற பாட்டம்மாள் மாரடைப்பால் நேற்று மறைந்து விட்டார்.அவரைப் பற்றி நான் கடைசியாக எழுதிய பதிவையே அவருக்கு காணிக்கையாக்குகிறேன். சாந்தி நிலவவேண்டும் என்று பாடி நமக்கெல்லாம் சாந்தி அளித்த அவர்தம் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைம்.அவர் குடும்பத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்
வேலூர் செல்லும் வழியில் ஒரு சிறு கிராமம். தாமல் என்று பெயர். அழகான சிவன் கோவில் டிரங் சாலையிலிருந்து பார்த்தாலே தெரியும்.இந்த ஊரில்தான் 28-03 1919ல் திருமதி D. K பட்டம்மாள் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தார்.பெண்கள் வெளியே சென்று வாரத அந்தக் காலத்திலேயே 5 வயது தம்பி D K ஜெயராமன் துணையோடு காஞ்சிபுரம் சென்று சங்கீதம் கற்று வந்தார்.பின்னர் காஞ்சிக்கே குடிபெயர்ந்து பிரபல வித்வான் காஞ்சிபுரம் நைனா பிள்ளையிடம் சங்கீதம் கற்றுக் கொண்டு பிரபலமானார். சங்கீத உலகத்தின் முடிசூடா விதுஷிகள் எம் எஸ் சுப்பலக்ஷ்மி, எம் எல் வஸந்தகுமாரி,டி.கே பட்டம்மாள் என்று பெயர் பெற்றார்.



பாரதியின் பாட்டுக்களை பாடுவதற்கு பயந்த அந்த பிரிட்டிஷ் காலத்திலேயே துணிந்து பாரதியாரின் பாடல்களை மேடைதோறும் பாடி பிரபலப் படுத்தினார். நல்ல கணீரென்ற குரல், அக்ஷர சுத்தம், சிதைவு படாத கீர்த்தனைகள் ராகபாவம் இதெல்லாம்தான் இவருக்கு சொத்து.அதுவும் தீக்ஷதர்கீர்த்தனைகளை அவரை மாதிரி பாட மற்றுமொருவர் பிறக்கத்தான்வேண்டும். அதே மாதிரி பெண்களூக்கு மிருதங்கம் வாசிப்பதில்லை என்ற வைராக்கியத்தை விட்டு விட்டு பாலக்காடு மணி ஐய்யர் இவருக்கு வாசித்த பெருமையினாலேயே இவரது சங்கீதம் எப்படிப் பட்டது என்று தெரிந்து கொள்ளலாம்.



அதனால்தான் இவரை பட்டம்மாள் என்று சொல்லுவதைவிட பாட்டம்மாள் என்று சொல்லுவதே சாலப் பொருத்தம். பட்டங்களுக்குத்தான் பட்டம்மாளால் பெருமை.



இன்று அவருக்கு வயது 90. அவருக்கும் அவரது கணவர் திரு. ஈஸ்வர்னுக்கும் நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அருளுமாறு கஞ்சி காமாக்ஷி சமேத ஏகாம்பிரேஸ்வரரை வேண்டிக்கொள்ளும் என்னுடன் நீங்களும் சேருவீர்கள் என்று நம்புகிறேன்.