Friday, January 19, 2007

பாபநாசம் சிவன் தமிழ்த்தியாகய்யா(5)

Papanasam Sivan: The Tamil Tyagarajar (5)




பாபநாசம் சிவனின் வாழ்க்கையே மிகவும் எளிமையானது. மயிலை மாடவீதிகளில் 75 வயதிலும் மார்கழிமாத குளிரில்
கபாலியைப்பற்றியும் கற்பகாம்பாள் பேரிலும் படல்களை பாடிக்கொண்டு பஜனை செய்வார்.
அவருடன் அந்தகாலத்து பெரிய வித்வான்களும் கூடவே பாடிக்கொண்டு வருவார்கள்.
அவருக்கு சதாபிஷேக விழா நடந்தது.சென்னையில் கிருஷ்ணகான சபாவின் சார்பில் அது 1971வில் நடைபெற்றது.
எனக்கும் அதில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்து. பிரபல வித்துவான்களும், நீதிபதிகளும் அதில் கலந்து கொண்டார்கள்.
விழா மாலை 6.. மணிக்கு ஆரம்பித்து இரவு 10.00 வரை சென்றது. அன்று நல்ல மழை. விழாமுடிந்ததும் எல்லோரும் அவரவர்
வாகனங்களில் ஏறிக்கொண்டு சென்று விட்டார்கள்,ஆனால் சிவனுக்கு வண்டி வரவில்லை. நான்தான் அவருடன் அவரை
வழிஅனுப்புவதற்காக இருந்தேன்.
"என்ன மாமா வண்டி வருமா இல்லை நான்வேனா வேறூ கார் ஏற்பாடு செய்யட்டுமா" என்றேன்
"இல்லை அம்பி வண்டி வந்துவிடும் கொஞ்சம் இரு" என்றார்.
மழையும் விடவில்லை. அந்த கொட்டும் மழையிலும் ஒரு சைக்கிள்ரிக்ஷாக்காரன் வண்டியை ஓட்டிகொண்டு வந்துகொண்டிருந்தான்.
கிட்டே வந்தவுடன் "ஐய்யா போலாமுங்களா" என்றான்.எனக்கு ஒன்றும் புரியவில்லை
"என்ன மாமா கார்வரவில்லயா" என்றேன்.
"இல்லை அம்பி இவன்தான் எனக்கு எங்கே போனாலும் வந்து இருந்து பத்திரமாக கூட்டிக்கொண்டு போகிறான்.
காருக்கு 50ரூபாய் குடுத்தால் 5 நிமிஷத்தில் மயிலை கொண்டு விட்டுவிடுவான்.
ஆனால் அதே 50 ரூபாயை இவனுக்குக் கொடுத்தால் அரைமணியாகும்.
இவன் குடும்பமே ஒரு வாரத்துக்கு வயிறாறச்சாப்பிடும்" என்றார்.அந்த அளவுக்கு கருணையும்.எளிமையும் கொண்டவர்.

இந்த பகுதியில் சிவனின் இரண்டு பாடல்களைப் பார்க்கலாம்/கேட்கலாம்.
ஒன்று திருவாரூர் கோவிலில் உள்ள வாதாபி கணபதியின் மீது படப்பெற்ற பாடல்.
திருவாரூர் கோவிலின் அமைப்பே வானவெளியிலிருந்து பார்த்தால் ஸ்ரீ சக்ர மேரு வடிவில் இருக்கும்.
40 வேலி கோவில் 40 வேலி குளம்.பார்ப்பதற்கு மிக கம்பீரமாக இருக்கும்
ஸ்ரீசக்ரத்தின் மத்யபாகத்தில் கமலாம்பாள் வலதுபக்கத்தில் வாதாபி கணபதி.
சஹானா ரகத்தில் அமைந்தது இந்தப்பாடல்.
இரக்ககுணத்தை பிரதிபலிக்கும் ராகம் சஹனா.
மிகவும் அழகாக அமைந்த பாடல் இது
இதில் காவேரி வருவதற்கு காரணமாக இருந்த அகஸ்தியரையும் முருகப்பெருமானையும் புகழ்கிறார்.

ராகம்:- சஹானா தாளம் :- ஆதி.

பல்லவி

ஸ்ரீ வாதாபி கணபதியே நின் திருவடியே சரணம் ஓம் (ஸ்ரீ)

அனுபல்லவி

தேவாதி தேவன் தியாகேசன் திருவிளயாடல் செய் திருவாரூர் வளர் (ஸ்ரீ)

சரணம்

நம்பினபேர்க் கிஹபரமிரண்டிலும் நல் வாழ்வும் பேரின்பமும் நல்கும்

தும்பிமுகப் பெருமானே அடி தொழும் தொண்டர்கள் வேண்டும் வரம்தருவோனே

சம்புவுடன் கமலாம்பிகை மகிழும் தனயனே தயாகரனே ஜகம் புகழும்

கும்ப முனிக் கருள் குமரன் முன்தோன்றிய கோமானே ராமதாசன் உளம் வளர் (ஸ்ரீ}

இத்துடன் மீரா படத்தில் எம்.ஸ். அம்மா படியபாடலும் நந்தனார் என்ற படத்தில் எம். எம் தண்டபாணி தேசிகர் பாடிய என்னப்பனல்லவா என்தாயுமல்லாவா பொன்னம்பலத்தவா பாட்டும் உள்ளது

Sunday, January 14, 2007

சிக்கல் இல்லாத சிக்கில்....

சங்கீத ஞானம் எனக்கு அவளவாக என்ன அவளவும் போதாது, எனவே சிக்கலே இல்லாத ஒரு முழுமையான சங்கீதம் கேட்க வேண்டும் என்பது என் நெடுநாளைய ஆசை.Deserve before you desire(முதலில் தகுதி பின்புதான் ஆசை) என்பார்கள் ஆங்கிலத்தில். சரி நமக்கு என்றுதான் அந்தத்தகுதி வருமோ என்று காத்திருந்தேன். அன்று வந்தது. வேறு எங்கே 12ஆம் தேதியன்று மாலை நங்கநல்லூர் நம்ம தியகராஜ சங்கீத சமாஜத்தில்தான்.இந்தச் சபாவில்தான் என்னையும் ஒரு உபயோகமுள்ள மனிதனாக மதித்து காரியக் கமிட்டியில் சேர்த்துக்கொண்டார்கள் அதனால்தான் நம்ப என்ற அடைமொழி.


சமாஜம் காரியதரிசி திரு. ராமநாதன் தொலைபேசியில் அழைத்து "சார் இன்னிக்கு சிக்கில் குருசரன் கச்சேரி இருக்கு சாயங்காலம் வாங்கோ" என்றார்.நானும் உடனே "நிச்சியம் வந்து விடுகிறேன்" என்று சொல்லிவிட்டு வழக்கம்போல் "டிமிக்கி" கொடுத்து விடலாம் என்று நினைத்தேன்.ஆனால் அவர் அதற்கப்பறம் சொன்ன வார்த்தைகள் என் மனத்தின் எண்ணங்களை அடியோடு மாற்றி சங்கீதத்தின் மீது அபார பக்தி கொள்ளச் செய்து விட்டன. அப்படி என்னதான் சொன்னார் அவர் சங்கீதத்தை பற்றி. அவர் சொன்னது இதுதான்"சார் இன்னிக்கி கச்சேரி முடிந்ததும் பிரசாதம் சாம்பார் சாதமும்,தயிர்சாதமும்" அது போதாதா நான் குடும்பத்துடன் நங்கநல்லூரில் மாலை ஆறு மணிக்கே "டேரா" போடுவதற்கு.

அன்றைய நிகச்சி

திரு. சிக்கில் குருசரண்---வாய்பாட்டு
திரு. மைசூர் ஸ்ரீகாந்த்----வயலின்
திரு. ஸ்ரீ முஷ்ணம் ராஜாராவ்- மிருதங்கம்
திரு. ஸ்.வி.ரமணி-----------கடம்

சிக்கில் குருசரண் வயதில் இளையவர், அபாரமான குரல் வளம், இனிமையான சரீரம் இளமையான சாரீரம் எல்லோரையும் கவரும் வசீகரமான தோற்றம்.வேய்குழல் விற்பன்னர்களான சிக்கில் சகோதரிகளின் பேரன், அதனால் நல்ல சங்கீத பரம்பரை வழி. குல வித்தை கல்லாமல் பாகம் படும். அன்று பட்டது . எப்படி என்று பார்க்கலாமா? வயலின் வாசித்த ஸ்ரீகாந்த்தும்,கடம் வாசித்த ரமணியும் முன்னிலை வித்வான்கள். மிருதங்கம் வாசித்த ஸ்ரீ முஷ்ணம் ராஜா ராவோ அந்த வாத்தியத்தில் ஜாம்பவான்.கச்சேரி களை கட்ட வேறு என்ன வேண்டும். இனி கச்சேரிக்கு போகலாமா?

400 பேர்களேஅமரும் ஹாலில் கச்சேரி ஆரம்பம் ஆவதற்கு முன்பே கூட்டம்
நிறைந்து வெளியில் ரசிகர்கள் நின்று கொண்டு இருந்தார்கள். சாவேரி ராக வர்ணத்துடன் கச்சேரி ஆரம்பம். நல்ல கச்சிதமான ஆரம்பம் All that begins well must end well நல்ல ஆரம்பம் நல்ல முடிவைநோக்கித்தான் செல்லும் என்பார்கள். அன்று அதுதான் நடந்தது.அடுத்து வந்தது முத்துஸ்வாமி தீக்ஷ்தரின் ஷண்முகப்பிரியா ராகத்தில் அமைந்த சித்தி விநாயகம் என்ற கிருதி.ராகத்தின் பரிமாணத்தை கொஞ்சம் காட்டிவிட்டு கிருதியின் உச்சரிப்பில் கவனம் செலுத்தி பாடியது அதுவும் ஸவரப்பிரஸ்த்தாரத்தில் ஒரு மினி 1000வாலவை கொளுத்திப் போட்டது போல ஸ்வரங்களை விளாசியது அற்புதம். தீக்ஷதர் கிருதிகளை கொஞ்சம் மடியுடன் வார்த்தை சேதமில்லாமல் பாடினால்தான் ரசிகர்களை சென்று அடையும். அதேமாதிரி அன்று சென்று அடைந்ததை ரசிகர்கள் தங்கள் கரகோஷத்தின் மூலம் தெரியப்படுத்தினார்கள். உடனே சுருசுறுப்புடன் பிலஹரி ராகத்தில் "வா மயூரமீதில் ஏறி வா என்னை ரக்ஷிக்க வா" என்ற பாடலால் மேலும்
மெருகூட்டினார். கச்சேரி நடைபெற்ற இடம் "ரஞ்சனி ஹால்" அதனால்தானோ என்னவோ ரஞ்சனி ராகத்தை எடுத்த குருசரண் அதை அலசி அதன் முழுஸ்வரூபத்தையும் தோரணமாக கட்டித் தொங்கவிட்டார்,அதிலும் தியாகராஜரின் "துன்மார்க்க சராதமுலெனு" கீர்த்தனத்தை எடுத்து வல்லின மெல்லின பிரயோகங்களுக்கு மதிப்பு கொடுத்து ஸ்வரபிரஸ்தாரங்களுடன் மென்மையாக வழங்கி ரசிகர்களை மகிழ்வித்தார்.நிரவலின்போதும் ஸ்வரப்ரஸ்தாரத்தின்போதும் ஸ்ரீ முஷ்னம் ராஜா ராவ் பாடகருடன் கூடவே தொடர்ந்து வாசித்து காலப்ரமாணத்துடன், வாசித்த வாசிப்பு "சூப்பர்". மிருதங்கம் பேசுமா? பாடுமா? என்றால் அன்று அவர் வாசிப்பை கேட்டப்பிறகு முடியும் என்றுதான் கூறவேண்டும். என்ன வாசிப்பைய்யா அது! கைலாயத்தில் உள்ள நந்திதேவரே கேட்டு மகிழ்ந்திருப்பார். இதுவே இப்படி யென்றால் தனி ஆவர்தனத்தைப் பற்றி தனியாகச் சொல்லவேண்டுமா என்ன?

அன்று மொத்தம் 11 பாடல்களை வழங்கினார். எல்லாவற்றையும் விவரிக்கமுடியாது. அநுபவித்துதான் அறியமுடியும்.இருந்தாலும் அன்று கேட்ட இரண்டு முக்கிய உருப்படிகளைப் பற்றி சொல்லாமல் இருந்தால் விமரிசனம் முற்றுப்பெறாது. காம்போதி ராகத்தை எடுத்துக்கொண்டு விரிவாக ராக ஆலபனை செய்தார் காம்போதியில் அன்று அவர் வழங்கிய ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே என்ற காஞ்சி பரமாசாரியாருக்கு பிடித்த பாடலை .(இதை அவரே தன்னுடைய குரலில் அரியக்குடி ராமனுஜ ஐய்யங்காருக்கு பாடி பதம் பதமாக அர்த்தம் சொல்லி விளக்கியதாக கூறுவார்கள்) பாடியவிதம் அருமையிலும் அருமை. இந்தப்பாடலை ஒரு ஆறுமாசக் குழந்தையை துங்கச்செய்யும் தாயைப் போல அரவணைத்துப் பாட வேண்டும் ஏதோ ஆறுவயசு அடம் பிடிக்கும் குழந்தையை அடித்து கூட்டிச் செல்வதுபோல் பாடக் கூடாது. குருசரண் அருமையாக வழங்கினார்.

அடுத்து சொல்ல வேண்டியது "மெய்ன்' உருப்படியான ராகம் தானம் பல்லவியில் வழங்கிய சங்கராபரணம் ராகம்.ராகத்தை அஸ்த்திவாரத்திலிருந்து மெதுவாக ஆரம்பித்து கோர்வையாக் கார்வையுடனும் பிருகாக்களுடனும் கொஞ்சம் கொஞ்சமாக மேலே சஞ்சாரித்து ஸுஸ்வரத்துடன் கச்சிதமாக தானத்தையும் இரண்டறக் கலந்து அவர் அன்று வழங்கியது ரசிகர்களை சொர்க்கலோகத்துக்கே கொண்டு சென்றது.கச்சேரி "ஸ்வர ராக சுதா"வாகத்தான் இருந்தது. ஆமாம் அன்று அவர் வழங்கிய கிருதியும் தியாகராஜரின் "ஸ்வர ராக சுதா" தான்
கச்சேரி முடிந்ததும்தான் இந்த உலகுக்கே வந்தேன். ஆமாம் நிஜமாகவே ரசிகர்களை பயமுறுத்தாமல் இனிமையாகப் பாடிய சிக்கல்இல்லாத சிக்கில் குருசரண் தான்.

நங்கநல்லூர் ரசிகர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்கள் எல்லோரும் பல ஆண்டுகளாக டி'நகர்,மயிலை,திருவல்லிகேணி போன்ற இடங்களில் பிரபல வித்துவான்களின் கச்சேரியைக் கேட்டு அனுபவித்து இப்பொழுது இங்கே வசிப்பவர்கள். கச்சேரி முடிந்ததும் ரசிகர்களே ஐந்துநிமிடம் எழுந்து நின்று கரகோஷம் செய்தார்கள்என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

கடைசியாக சமாஜத்தைப் பற்றி ஒரு வார்த்தை. எந்தவிதமான மாதாந்திர கட்டணமும் இன்றி ரசிகர்களுக்கு மாதா மாதம் கச்சேரியும் இந்த வருஷம் ஜனவரி மாதம் முழுவதும் கச்சேரிகள் வைத்து அனைத்துத் தரமக்களுக்கும்
இலவசமாகத் தரும்ஒரே சபா இதுதான். இதை முன்னின்று நடத்திவரும் திரு.ராமனாதன் அவர்களை எப்படி புகழ்வது என்றே தெரியவில்லை.ஆனால் அவருக்கு புகழைப் பற்றியெல்லாம் கவலையே கிடையாது இந்தத் தொண்டில் அவர் ஒரு தியாகராஜராகவே மாறிவிட்டார். சமாஜத்திற்கு தன் உடல், பொருள், இடம் எல்லாவற்றையும் வழங்கிவிட்டு பின்னனியில் அமைதியாக இருப்பவர் திரு.ஸ்.வி.ரமணிஅவர்கள் அவருக்கு உறுதுணையாக இருக்கும் திரு. சுந்தரராஜன் இவர்களின் பணி மகத்தானது. ஏதோ நானும் இவர்களுடன் இராமபிரானுக்கு அணில் சேவை செய்ததுபோல ஈடுபடுத்திக் கொள்ளும் பாக்கியம் கிடைத்தது பூர்வ ஜென்மாவில் செய்த புண்ணியம்தான்.

Friday, January 12, 2007

கோலங்கள்



மக்கள் மறந்ததால் மறைந்துவரும் கலை இது. பல குழந்தைகளுக்கு ஏன் சில பெரியவர்களுக்குக் கூட கோலங்கள் என்றால் டக்கென்று ஞாபகத்துக்கு வருவது இரவு சன் டீ.வியில் வரும் கோலங்கள் சீறீயல்தான்.ஆனால் இது அது அல்ல. கோலக்கலையைப் பற்றியது.மார்கழி மாதம் வந்துவிட்டாலே மகளிர் அனைவரும் வயது வித்தியாசம் பார்க்காமல் காலையிலேயே எழுந்து அவரவர் வீட்டின் முன்பு அழகிய கலர்ப் பொடிகளுடன் கோலப் போட்டியில் அசத்திவிடுவார்கள். இதில் சில சமயம் ஆண்களும் கலந்து கொள்வார்கள். எங்களது வங்கியில் நவராத்திரியின் போது கோலப்போட்டிவைத்து பரிசுகள் தருவோம். அப்பொழுது மறக்காமல் ஸ்ர்குலரில் ஆண்கள் கலந்து கொள்ளாக்கூடாது என்று குறிப்பிடுவோம்.
கோலம்போடுவதற்கு கலர்ப் பொடிகளைவிட பொறுமை,கல்பனாசக்தி,கணக்கில் திறமை,சுறுசுறுப்பு
போன்றவைகள் மிக அத்தியாவசியமானது. இது பெரும்பாலும் பெண்களிடம்தான் மிகுதியாகக் காணப்படுகிறது. அதனால்தான் இந்தக்கலையில் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.

இபொழுது இந்தக்கலை மறைந்துவரும் நிலையில் உள்ளது.அடுக்குமாடி கட்டிடங்கள் மிகுந்துவரும் இந்நாட்களில் கோலம் போடும் பெண்களும் இடமும் தட்டுப்பாடாகிவிட்டன.இருந்தாலும் சமீபத்தில் நடைபெற்ற நம்ப மயிலாப்பூர் விழாவில் வடக்கு மாடவீதியில் ஒரு பெரிய கோலாஹலமான கோல வீதியே படைத்து விட்டார்கள். நம்மவர்களும் அயல்நாட்டினரும் கண்டு களித்தனர்.
இந்தக்கலை அழிந்துவிடாமல் ஆதரிக்கவேண்டியது இன்றைய சமூகத்தினரின் கடமை. பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்தக்கலையை நன்கு கற்பித்து போஷித்தால் பிற்காலத்தில் சிட்னி,ஹுஸ்டன்,டொரான்டோ போன்ற இடங்களிலாவது நம் மக்கள் கோலம் போடுவார்கள்.

Tuesday, January 09, 2007

பரம கிருபாநிதியல்லவோ (2)

இப்படி மௌனமாகவே ஒரு மாதம் கழிந்தது.கடைசியில் ஒரு மாதம் முடிந்தவுடன் பெரியவர் காலையில் அனுஷ்டானம் முடிந்தவுடன்" அவனைக்கூப்பிடு' என்றார்.

கேள்விப்பட்டவுடன் அவருக்கு பணிவிடை புரிந்து வரும் அந்த நபர் வந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து
"பெரியவாஎன்னை மன்னிக்கவேண்டும் எனக்கு ஏதாவது தண்டனை கொடுங்கோ" என்றார். மாகான் சொன்னார் "உனக்கு தண்டனை கொடுக்க நான் யாரு? தப்பு செய்தவாதான் தண்டனை அனுபவிக்கனும். நீ ஒரு தப்பும் செய்யலயே." உடனே "இல்லே அன்னிக்கி நடந்ததற்கு நான்தானே காரணம்" என்றர்.

"ஓ அதுவா" என்று புன்சிரிப்புடன் கூறினார் பெரியவர்கள்."நான் ஒரு சன்யாசி.சன்யாஸ தர்மத்தின்படி நாங்கள் எந்தப் பொருளின்மீதும் பற்று வைக்கக்கூடாது.பற்றுவைக்காமல் இருப்பதோடுமட்டுமல்லாமல் அப்படி நாங்கள் இருக்கிறோம் என்பதை உலகுக்கு தெரியப் படுத்தவேண்டும்.சந்யாச தர்மத்தின் படி நாங்கள் ஒரு வேளை சாத்விகமான உணவை உட்கொள்ளவேண்டும். அப்போதுகூட அதன் மீது பற்று இல்லாமல்அருந்தவேண்ண்டும்.அப்பொழுதுதான் நாங்கள் மற்றவர்களுக்கு ஆசையை விட்டொழிக்கவேண்டும் என்றெல்லலாம் உபதேசம் பண்ண ஒரு தகுதி வரும். அன்றும் அதற்கு முதல் நாளும் நீ பண்ண கீரையை நான் சாப்பிடும்போது எனக்கு அதன் மீது ஆசை கிடையாது.ஆனால் நான் சாப்பிட்டவிதமோ. அல்லது என்னுடைய சொல்லோ அல்லது செயலோ அதன் மீது எனக்கு பற்று இருப்பதுபோல ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டது என்று நினைக்கிறேன். அது சன்யாச தர்மத்துக்கு விரோதமான செயல். தப்பு செய்தது நான். அதற்காக நான் எனக்கு தண்டனன கொடுத்துகொண்டேன்" என்றார்.

நீதியைப் பற்றிச் சொல்லும்போது
"நீதியை நிலை நாட்டினால் மட்டும் போதாது நிலை நாட்டிவிட்டதாக எடுத்துக்காட்டவேண்டும்.( It is important to render justice;but it is more important to establish that justice seems to have been done) இந்த வாசகத்துக்கு உதாரணபுருஷராக வாழ்ந்தவர்தான் ஸ்வாமிகள்

சரி திருமதி.எம்.ஸ்.சுப்பலக்ஷிமி மகானின் மீது பாடிய பாடலைக் கேட்க இங்கே'><"கிளிக்செய்யவும்">

Monday, January 08, 2007

தியாகராஜயோக வைபவம்


இன்று சத்குரு ஸ்ரீ தியகராஜஸ்வாமிகளின் ஆரதனை தினம். மார்கழி மாதம் பௌர்ணமி தொடங்கி வரும் பஞ்சமி புஷ்ய நக்ஷ்த்திரத்தன்றுதான் அவர் ஸ்ரீ ராமனுடன் இரண்டறக் கலந்தார். அவர் மறைந்து 160 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்று திருவையாற்றிலே சங்கீத வித்வான்கள் ஒன்றுகூடி அவருக்கு சங்கீதாஞ்சலி செய்வார்கள்.

அவரை எல்லோரும் ஒரு ஏழை அந்தணன் சொத்து சுகமே இல்லாதவர் என்று கூறுவார்கள். என் மனம் ஏனோ அதை ஒப்புக்கொண்டதே இல்லை.அவர் வீட்டில் எப்போதும் நிறையப்பேர்கள் இருந்தனர். ராமர், சீதா, லக்ஷ்மனர், பரதன், சத்ருக்கணன், ஆஞ்சனேயர். இவர்களுக்குகாலை ஆரம்பித்து இரவு வரை எல்லா உபசாரங்களும் ஒரு குறைவும் இல்லாமல் நடந்தது. மேலும் அவர் சரபோஜி மஹாராஜா போல சதாரண அரசர் இல்லை. ஒரு சக்கிரவர்த்தியாகத்தான் இருந்து வாழ்ந்தார். ராமபக்தி என்ற சாம்ராஜ்யத்தின் ஏகபோக சக்கிரவர்த்தியாக இருந்தார். இருந்தும் வருகிறார்.இதை நான் சொல்லவில்லை அவரே சொல்லுகிறார் தன்னுடைய கீர்த்தனையில். அந்தக் கீர்த்தனையை படித்தும்,அறிந்தும்,கேட்டும் அவருக்கு நாமும் அஞ்சலி செலுத்துவோம்.

ராகம்:- சுத்தபங்காள தாளம் :-ஆதி
பல்லவி

ராமபக்தி ஸாம்ராஜ்யம்
மேமாநவுல கப்பெனோ மனாஸா (ராம)

அனுபல்லவி

ஆமாநாவுல ஸந்தர்சன
மத்யந்த பிரும்மானந்தமே (ராம)

சரணம்

ஈலாகனி விவரிம்பலேனு
சாலா ஸ்வனுப வேத்யமே
லீலா ஸ்ருஷ்டி ஜகத்ரய மனே
கோலஹல தியகராஜனுதுடகு (ராம)

ஏ மனமே/மனிதா ராம பக்தி என்கிற சாம்ராஜ்யத்தின் சக்கிரவர்த்தி என்கிற பதவி எவனொருவனுக்கு கிடக்கிறதோ அப்பேர்ப்பட்ட மனிதனின் தரிசனம் மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்குகக்கூடியது
அந்த சந்தோஷத்தை எவராலும் வார்த்தைகளினால் வர்ணிக்க முடியாது. அவரவர்கள் தங்களது சொந்த அனுபவத்தால் மட்டுமே உணரமுடியும். இந்த உலகத்தில் மட்டுமல்லது கடவுளின் படைப்பால்உண்டாக்கப்பட்ட மூன்று உலகத்திலும்
எந்த மனிதனோ அல்லது தேவனோ இந்த சக்கிரவர்த்தி பதவியை அடைகிறானோ அவனுடைய தரிசனமும் சந்தோஷத்தைக் கொடுக்கக்கூடியது என்பதில் சந்தேகமே இல்லை .இந்தப் பதவியில்தான் தியகராஜன் மிகவும் சந்தோஷமா இருக்கிறான் என்கிறார் தியகராஜர்.
இனி ஓ.ஸ். அருண் பாடும் இந்தப் பாட்டைக் கேட்க இங்கே '><"கிளிக்">"> செய்யவும்

Sunday, January 07, 2007

பரம கிருபாநிதி அல்லவோ

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
வள்ளுவர் துறவு அதிகாரத்தில் இந்தக் குறளை வைத்துள்ளார். இதனுடைய பொருள் எந்த எந்த பொருள்களினாலோ அல்லது அதன் மீது பற்றுவைப்பதாலோ நமக்கு துன்பம் வருமோ அந்த அந்த பொருள்களயோ அல்லது அதன் மீது உள்ள பற்றையோ நீக்கிவிட்டால் நமக்கு அந்தப் பொருள்களினால் வரும் துன்பம் வராது. புரியும்படிச் சொல்லவேண்டும் என்றால் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சர்க்கரையையோ அல்லது அதன் மீது உள்ள அதீதப் பற்றை விட்டுவிட்டால் அவர்களுக்கு அந்தவியதியால் வரும் துன்பம் வராமல் போகும். பற்று என்று கூறும்போது வாயில் உள்ள இரண்டு உதடுகளும் சேரும் இது இயற்கை. இதோ இந்தக் குறளை கூறிப் பாருங்கள்

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு


ஆண்டவனிடத்தில் பற்று வைக்கவேண்டும் என்று கூறும்போது அது நல்ல பற்று என்பதை உணர்த்து வண்ணம் பலமுறை உதடுகள் சேரும்படி பற்று என்ற வார்த்தையை அதிகமாக் கையண்டிருக்கிறார் வள்ளுவர். ஆனால் இந்த "யாதனின்" குறளைக் கூறிப் பாருங்கள் உதடுகள் ஒட்டவே ஒட்டாது. பற்றை முற்றிலும் விடவேண்டிய இடத்தில் அறவே விட்டுவிட்டார். சரி அப்படி பற்று வைக்காமல் வாழ இன்றைய உலகத்தில் ஒரு மனிதனால் வாழமுடியுமா? முடியும் என்பதற்கு ஆதர்ச புருஷராய் திகழ்ந்தவர் ஒருவர் உண்டு.
அவர்தான் இவர்



பெரியவா என்றும் பரமாசாரியார் என்றும் உலகத்தாரால் பெரிதும் வணங்கப்பெற்ற காஞ்சி காமகோடி மடத்தின் 68 வது பீடாதிபதியாகத் திகழ்ந்த ச்ரீ சந்திரசேகரேந்திரசரஸ்வதி ஸ்வாமிகள். இன்றோடு அவர் மஹாசமாதி ஆகி 13 வருடங்கள் ஓடி விட்டன. ஆனாலும் அவருடன் இருக்குபடியான சில சந்தர்ப்பங்களைக் கொடுத்த ஆண்டவனுக்கு என் நன்றி. என் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சாதனை என்று ஒன்று உண்டென்றால் அது அவர் இருந்த காலத்தில் நாமும் வழ்ந்தோம் என்பதே.

துறவையும் துறந்த மஹான் அவர். ஒரு துறவி எப்படி இருக்கவேண்டும் எனபதற்கு உதாரணமாய்த் திகழ்ந்தவர். அவருடைய வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை எனக்கு ஆஞ்சநேய உபாசகரும்,நங்கநல்லூர் மற்றும் பாண்டிச்சேரியிலுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்களச் ஸ்தாபித்து வழிநடத்திவரும் திரு ரமணி அண்ணா கூறியதை இந்த நாளில் ஒரு பானை சோற்றுக்கு ஒரு அரிசி பதம் போல இங்கு பதிக்கிறேன் பெரியவாளின் திருவடிகள் வணங்கி..

பரமாச்சாரியார் ஒருமுறை வெளியூரில் முகாமிட்டிருந்தார். பூஜையை முடித்துக்கொண்டு மதியம் 3 மணியளவில்தான் அவர் உணவு அருந்தும் வேளை. அவருடைய உணவு மிகவும் எளிமையானது. கொஞ்சம் அரிசிசாதம், எதாவது ஒரு கீரைஅனேகமாக அது அகத்தீ கீரையாகத்தான் இருக்கும்,பழம் இவ்வளவுதான். வெகுகாலமாக அவருடன் கூடவேதங்கியிருந்து அவருக்கு கைங்கரியம் செய்துவரும் ஒருவர்தான் வழக்கமாக அவருக்கு உணவு படைப்பார். தங்கியிருந்த இடமோ ஒரு குக்கிராமம் வசதிகள் ஏதும் இல்லாத ஊர்.

முதல்நாள் உணவை அருந்தினார் பெரியவர் அதில் எதோ ஒரு கீரை பதார்த்தம் இருந்தது. மறுநாளும் அதே கீரையைச் செய்து இருந்தார்கள் பெரியவரும் அதைச் சாப்பிட்டார். இப்படி அதே கீரையுடன் இரண்டு நாட்கள் சென்றன. மூன்றாவது நாளும் பெரியவர் சாப்பிட உட்கார்ந்தார். அவருக்கு கைங்கரியம் செய்பவரும் அதே கீரையை இலையில் இட்டார். ஸ்வாமிகள் கேட்டார் "..... என்ன இன்னிக்கும் அதே கீரையா" என்றார். பரிமாறுபவர் சொன்னார் "இல்லே பெரியவாளுக்கு இந்தக்கீரை பிடித்திருக்கிறது போல. முதல் நாளே பெரியவா கேட்டு ரெண்டாம்தரம் போட்டேன். அதான் பெரியவாளுக்கு இந்த கீரை பிடிக்கின்றதுபோல என்ற எண்ணத்தில் அதையே செய்தேன்" என்றார். இதைகேட்டவுடன் பெரியவர் ஒன்றும் சொல்லாமல் பாதி சாப்பாட்டிலேயே எழுந்துவிட்டார். காஷ்ட மௌனத்திலும் (யாருடனும் பேசாத நிலை)சென்றுவிட்டார்.

பெரியவர் சாப்பிட்டபிறகுதான் மற்றவர்கள் சாப்பிடும் வழக்கம் இதைகேள்விப் பட்டதும் யாரும் மடத்தில் சாப்பிடவில்லை. பரிமாறியவரை அவர்தான் ஏதோ தவறு செய்துவிட்டார் என்று அவரைக் கோபித்துக்கொண்டார்கள். அவரும் அப்படியே நினைத்து இரு கண்களிலும் கண்ணீர் தாரை தாரையாக கொட்ட பெரியவாளிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். பெரியவர்களின் மௌனம் தொடர்ந்தது. ஆனால் காரணம் தெரியவில்லை.

மீதியை நாளைப் பார்ப்போமா

ஜய ஜய சங்கரா ஹர ஹர சங்கர




Friday, January 05, 2007

கடல் கடந்த இசை.

இசைக்கு மொழி ஒருதடை கிடையாது என்பதை நான் சமீபத்தில் கேட்ட கச்சேரி உறுதிப்படுத்தியது. இசை எல்லா மக்களுக்கும் பொதுவானது. சிங்கப்பூரிலிருந்து ஒருவர் சென்னை வந்து ஒரு முழுநேர கர்னாடக இசைக் கச்சேரி நிகழ்த்தினார். இது என்ன அதிசயம் உலகெங்குமிலிருந்துதான் வந்து கலந்துகொண்டு நடத்துகிறார்களே என்கிறீர்களா? ஆனால் நான் சொல்லும் ஆள் தமிழ் வாசனையே இல்லாதவர். இந்தியவம்சாவளியைச் சேர்ந்தவரும் அல்ல. அவர் பெயர்.திரு.லோகாலியான்(MR.LOWKOLEON). அவர் ஒரு சிங்கப்பூர் வாழும் சைனா வம்சாவளியைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக சிங்கப்பூரில் கர்நாடக இசையை சிறப்பாக கற்பித்து வரும் திருமதி.பகவதியிடம் சங்கீதம் பயின்று வருகிறார்.

வெறும் பொழுதுபோக்குக்காகமட்டும் கற்காமல் அதில் தனிக் கச்சேரி செய்யும் அளவிற்கு தைர்யமும், திறமையும் பெற்றுள்ளார் என்பது அவர் சென்னையில் நிகழ்த்திய இரண்டு கச்சேரிகளில் கண்டேன். சென்னையில் நாரத கான சபா சிற்றரங்கத்தில் நடைபெற்ற அவரது கச்சேரி அரைமணி நேரம் ரமணி சங்கீத அகடமி சார்பில் நடைபெற்றது. விழாவிற்கு வேய்குழல் வேந்தன் திரு. ரமணி அவர்கள் வந்திருந்து முழுக்கச்சேரியையும் கேட்டு பாராட்டினார் என்றால் கச்சேரியின் வெற்றியைப்பற்றி நான் தனியாகச் சொல்ல வேண்டுமா என்ன?

மேடைக்கு வந்து அமர்ந்தவரைப் பார்த்தால் அப்படியே நம்ம ஊர் வித்வான்போல் ஜிப்பாவும் ஜரிகை வேஷ்டியும் அணிந்து கலக்கலாக இருந்தார். அவருக்கு பக்கவாத்தியமாக திருமதி.ஜெயந்தி கேசவ், மிருதங்கம் திரு. சஞ்சைவாசன். சாமி நின்னேகோரி என்ற ஸ்ரீ ராக வர்ணத்துடன் கச்சேரியை ஆரம்பித்து நன்றாகப் பாடி கைத்தட்டலையும் வாங்கினார்.பின்பு. கடினமான ருத்ரப்ரியாவில் கணநாயகம் பஜே என்ற தீக்ஷதர் கிருதியையும் நன்கு வழங்கினார். அன்று அவர் பாடிய மற்ற பாடல்கள்:-
தெலிசிராம சிந்தனதோ------ பூர்ணசந்திரிகா ராகம்-----------தியகராஜர்

பண்டுரீதகொலு வைய்ய ராமா-----ஹம்சநாதம்ராகம்---தியகராஜர்

ஏகலி மானுஷ ---------ரேவதிராகம்------------------அன்னமாச்சர்யா

ஏறுமயில் ஏறிவிளயாடு முகம்------மோகனம்ராகம்-----திருப்புகழ்-
அருணகிரிநாதர்
பாக்யாதா லக்ஷ்மி பாரம்மா----ஸ்ரீராகம்------புரந்தரதாசர்

ஏழுபாடல்களையும் தெலுங்கு,ஸம்ஸ்கிருதம்,தமிழ் மற்றும் கன்னடம் மொழிகளில் மிகச் சிறப்பாக மொழிச்சிதைவு இல்லாமலும்,ஸ்ருதியுடனும்,லயத்துடனும் அளித்தது சிறப்பாக இருந்தது. நம்மவர்களே "சங்கரி சங்குரு சந்திரமுகிஎன்ற அருமையான கீர்த்தனத்தை" ஷன்கரி ஷன்குரு ஷந்திரமுகி" என்று பாடுவதைப் பார்க்கும்போது சைனாக்காரராக இருந்தாலும் இவருடை உச்சரிப்பை பாராட்டியே தீரவேண்டும். அதுவும் தெலிசிராம கீர்த்தனையில் அவர் அளித்த சிட்டஸ்வரங்களின் பங்களிப்பு தரம் வாய்ந்ததாக இருந்தது. நம்முடைய சங்கீதத்தின் மீது இவருக்கு இருக்கும் பற்றும்,ஸ்ரத்தையும், குருபக்தியும்தான் கச்சேரியை நன்கு பரிமளிக்கச்செய்தது என்றால் அது மிகையாகாது.உண்மையான புலமையெனில் அதை வெளிநாட்டார் கண்டு வணக்கம் செய்திடல் வேண்டும் என்றானே மஹாகவி பாரதி அதை மெய்ப்பிப்பதுபோல இருந்தது அன்றைய கச்சேரி. பக்க வாத்தியம் வசித்த ஜெயந்தியும் சரி சஞ்சைவாணனும் சரி தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதைவிட படகரின் திறமைக்கு ஏற்ப அனுசரனையுடன் அடக்கி வாசித்தது கச்சேரியை நன்கு பரிமளிக்கச்செய்தது

குரு திருமதி.பகவதியிடம் பேசும்போது சொன்னார் இந்ததடவை புதுமையாக இவரை மேடை ஏற்றிவிட்டேன் அடுத்தமுறை சிங்கப்பூரில் இவரிடம் பயிலும் ஒரு இளம் தம்பதியினரை மேடை ஏற்றப்போகிறாராம். அபாரத்துணிச்சல்தான் இவருக்கு.

Wednesday, January 03, 2007

கைவிடமாட்டான் கனகசபேசன்




இன்று ஆருத்ரா தரிசனம். அம்பலகூத்தன் நடராஜனுக்கு மிகவும் உகந்த நாள். மார்கழிப் பௌர்ணமியுடன் கூடிய திருவாதிரை நாளில் நடைபெறும் திருவாதிரை விழாவை `ஆருத்ரா தரிசனம் என்பர். `ஆருத்ரா' என்ற சொல் `ஆதிரை' என்று மாறியது

வீட்டில் திருவாதிரைக் களியும் கதம்பகூட்டும் தயார் செய்து சாப்பிடுவார்கள். ஒருமுறை சேந்தனார் அளித்த களியை சிவன் ஏற்றுகொண்டார். அன்றிலிருந்து திருவாதிரைக்கு களியும் ஏழுவகைக்கூட்டும் அவித்த வள்ளிக்கிழங்கும் நைவேத்யமாகக் கொள்ளப்பட்டது. களி' என்றால் `ஆனந்தம்' என்பது பொருள். இறைவன் சச்சிதானந்த வடிவினன். அவனுக்கு ஆனந்த நடனப் பிரகாசம், ஆனந்த நடராஜன் என்ற ஒரு பெயரும் உண்டு. களி நடனம் புரியும் அவனுக்குக் களியைப் படைத்து நாமும் களிப்படைவதும் பொருத்தமே.

நாட்டில் நடராஜருக்கு முக்கியமாக ஐந்து நடனசபைகள் உண்டு.
திருவாலங்காடு(ரத்தின சபை),சிதம்பரம்(கனக சபை),திருநெல்வேலி(தாமிர சபை),மதுரை(வெள்ளி சபை),குற்றாலம்(சித்ர சபை) ஆகும்.
சிதம்பரத்துக்கு கனகசபை என்று பெயர்வரக் காரணம் அங்கே நடராஜர் எழுந்தருளியிருக்கும் மண்டபம் பராந்தக சோழனால் பொன்னால் வேயப்பட்டது.நடராஜர் எட்டுகைகளுடன் இடது பதம் தூக்கி ஆடுவார் மதுரையைத்தவிர மற்ற இடங்களில். மதுரையிலோ வலது பாதம் தூக்கி ஆடுகின்றார் பத்து கைகளுடன்.

கோபலகிருஷ்ண பாரதியார் தனது நந்தானார் சரித்திரத்தில் பல அருமையான பாடல்களில் தில்லை நடராஜனின் குணங்களையும் நந்தனாரது எளிமையான திட பக்தியையும் போற்றிப் பாடியுள்ளார். இவர் தியாராஜஸ்வாமிகளின் சமகாலத்தவர்.நந்தன் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர்.நடராஜனை ஆருத்ராதரிசனத்தன்று பார்க்கவேண்டும் என்று பல வருடங்களாக காத்திருப்பவர்.அவருடைய எஜமான் உத்தரவு தரவில்லை.அப்படிப்பட்ட வரை நடராஜன் தன் கருணையால் இந்த ஆருத்ரா அன்று ஆட்கொண்டு தன்னோடு ஐக்கியமாக்கிக் கொள்கிறான். தில்லை
வாழ் அந்தணர்களுக்கும் கிடைக்காத பேரின்பத்தை வழங்குகிறான்.உண்மையான பக்தி ஒன்றுக்கு மட்டும்தான் அவன் வசப்படுவான் என்ற உண்மையையும் நமக்கு புலப்படுத்துகிறான்

நந்தன் கனவில் கனகசபேசன்வந்து நான் உன்னை பொன்னம்பலத்திற்கு வரச்செய்து தரிசனம் தருகிறேன் என்று உறுதி மொழிகொடுத்தும் நந்தனுக்கு சந்தேகம் தீரவில்லை.ஏனென்றால் இத்தனை நாள் தன்னை கோவிலுக்குள் நுழையவிடாத சமூகமும் எஜாமனரும் அனுமதிபார்களா என்ற பயம். அதைப் பாட்டாக வெளிப்படுத்துகிறான். கோபலகிருஷ்ண பாரதியாரும் ஒரு அடிமையின் உணர்ச்சிகளுக்கு ஏற்றவாறு கருணாரசம் பொங்கும் மாஞ்சி ராகத்தை சமயத்திற்கு ஏற்ற மாதிரி அமைத்துள்ளார்.

ராகம்:- மாஞ்சி தாளம் :- மிஸ்ர சாபு

பல்லவி

வருகலாமோ ஐய்யா--- நான் உந்தன் அருகில்
நின்று கொண்டாடவும் பாடவும் நான் அங்கே வருகலாமோ

அனுபல்லவி

பரமகிருபாநிதி அல்லவோ----நீ
இந்த நந்தன் உபசாரம் சொல்லவோ
உந்தன் பரமானந்த தாண்டவம் பார்க்காவே நான் அங்கே (வருகலாமோ)

சரணம்

பூமியில் புலையனாய் பிறந்தேனே-- நான்
ஒரு புண்ணீயம் செய்யாமல் இருந்தேனே
என் ஸ்வாமி உந்தன் சந்நிதி வந்தேனே
பவசாகரம் தன்னையும் கடந்தேனே
கரை கடந்தேனே
சரணம் அடைந்தேனே
தில்லை வரதா பரிதாபமும் பாவமும் தீரவே -----(வருகலாமோ)

கண்களில் கண்ணீரை பெருகச்செய்யும் பாடலை திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன் உருகி உருகி பாடியிருப்பதைக் கேளுங்கள்.

கிளிக் <"இங்கே">


சரி நம் தமிழ்த்தியாகைய்யா திரு பாபநாசம் சிவன் மட்டும் சும்மா இருந்து விடுவாரா என்ன. ஆருத்ரா தரிசனத்தன்று நராஜன் ஆடும் ஆட்டத்தையே தன் பாட்டில் அழகான தமிழில் கொஞ்சவைக்கும் யதுகுலகாம்போதியில் குழைந்தும் குழைத்தும் அளிக்கிறார். பாட்டை முதலில் பார்த்துவிட்டு பிறகு கேட்போம்.

ராகம்:-யதுகுலகாம்போதி தாளம்:- ஆதி

பல்லவி

காலைத்தூக்கி நின்றாடும் தெய்வமே---
என்னை கைதூக்கி ஆட்கொள் தெய்வமே ஒரு....................(காலைத்தூக்கி)

அனுபல்லவி

வேலைத்தூக்கும் பிள்ளைதனைப் பெற்ற தெய்வமே
மின்னும் புகழ்சேர் தில்லை பொன்னம்பலத்தில் ஒரு..(காலைத்தூக்கி)

சரணம்

செங்கையில் மான் தூக்கி சிவந்த மழுவும் தூக்கி
அங்கம் சேர் ஒரு பெண்ணை அனுதினமும் தூக்கி
கங்கையை திங்களை கருத்த சடையில் தூக்கி
இங்கும் அங்குமாய்த் தேடி இருவர் கண்டறியாத........(காலைத்தூக்கி)

நந்தி மத்தளம் கூட்ட நாரதர் யாழ் தூக்க
தோம் தோம் என்று என் தாளம் சுருதியோடு தூக்க
சிந்தை மகிழ்ந்து வானோர் சென்னிமேல் கரம் தூக்க
முந்தும் வலியுடைய முயலகன் உன்னைத் தூக்க


அஹா என்ன ஒரு வர்ணனை.பாட்டைக் கேட்கும்போதே நடராஜரை முழுமையாகப் பார்த்துவிடலாம்.ஏம்பா நடராஜா நீ காலைத்தானே தூக்கிக் கொண்டு இருக்கிறாய் கை சும்மாதானே இருக்கு என்னை அதாலே தூக்கிவிடேன் என்கிறார்.முருகனைப் பெற்றதால்தான் உனக்கு பெருமை என்கிறார்.உடம்பெல்லாம் என்ன இருக்கு தெரியுமா கையில் மான் மற்றொரு கையில் நெருப்பு, கருத்த சடையில் கங்கை,சந்திரன் இதெல்லாம் போறாதுன்னு உன்னோடு இரண்டறக்கலந்து இருக்கும் பார்வதியை சதாசர்வகாலமும் தூக்கிக்கொண்டு இருக்கிறாயே. எந்தகாலைதூக்கி ஆடுகிறாய் தெரியுமா பிரும்மாவும் விஷ்ணுவும் தேடித் தேடி பாதளத்திற்கும் ஆகயத்திற்கும் இங்கும் அங்குமாய் ஓடி கண்டு பிடிக்க காண முடியாமல் இருக்கும் அந்தக் கால் அல்லவா அது. ஹரி ஐயனும் காணா அரிய ஜோதி ஆதி அந்தம் இல்லாத பழமனாதி.

சரி இத்தனையும் தூக்கிகொண்டு சும்மாவாய் இருக்கிறாய். இல்லையே நந்தியின் தாளத்திற்கும் நாரதரின் யாழிசைக்கும் தோம் தோம் என்று என்னுடய (பாபநாசம் சிவனுடைய) தாளம் சுருதியோடு தூக்க உன்னுடைய அஜபா நடனத்தின் தன்மையை அறிந்த தேவர்கள் மகிழ்ச்சியோடு தாங்கள் தலைக்குமேல் இருகைகளையும் தூக்கிக்கொண்டு இருக்க உன்காலின் கீழ் அகப்பட்டுக் கொண்டு இருக்கும் அரக்கனான முயலகன் வலியோடு உன்னைத்தூக்க நீ ஆடும் ஆட்டம் எப்படி இருக்கிறது தெரியுமா? என்று மகிழ்ந்து போகிறார். சிறிது ஹாஸ்யபாவத்தையும் இங்கே காட்டுகிறார்.மான், மழு,கங்கை,சந்திரன்,பார்வதி இத்தனை பேரை தூக்குகின்றாயே என்னை கைதூக்கி ஆட்கொள்ளுவது உனக்கு ஒரு பெரிய விஷயமா என்றும் கேட்பதுபோல் உள்ளது

சரி இப்போது திருமதி. சுதா ரகுநாதன் அனுபவித்து பாடிய பாட்டைக் கேட்கலாமா?
கிளிக்<"இங்கே">