Tuesday, December 15, 2009

சனி வழி தனி வழி 2

சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா

மஹான் முத்துஸுவாமி தீக்ஷதரின் சிஷ்யர்களின் ஒருவரான தஞசை பொன்னைய்யாபிள்ளைக்கு ஒரு சமயம் கடும் வயிற்றுவலி வந்து துன்பப்பட்டார். அவரது துன்பத்தைப் பார்த்து தாளமுடியாமல் அதற்கு காரணம் என்ன என்பதை தீக்ஷதர் அறியமுற்பட்டபோது அது நவகிரகங்களின் கோசாரத்தினால் அவரது ராசிக்கு ஏற்பட்ட துன்பம் என்பதையும் அறிந்துகொண்டார்.அதுவரை அம்பாளையும் மற்ற தெய்வங்களையும் மட்டுமே பாடி வந்த தீக்ஷதர் பரிகாரதேவதைகள் ஆகிய நவகிரங்களயும் துதித்து சிஷயனின் மேல் ஏற்பட்ட கருணையினால் ஒன்பது கிரகதேவதைகளின் மீது கீர்தனைகளை இயற்றினார்.மதுரைமணிஐய்யர் அவர்கள் தன் ஒவ்வொரு கச்சேரியிலும் தவறாமல் அந்த அந்த நாட்களுக்குகுரிய நவகிரகக் கீர்தனையைப் பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக திவாகரதனுஜம் சனைஸ்வரம் என்று சனீஸ்வர பகவான் மீது யதுகுல காம்போதி ராகத்தில் அமைந்த கீர்த்தனையைப் பாடுவார்.

சத்யாவின் கீபோர்ட் இசையில் முதலில் பாட்டைக்கேளுங்கள். அர்த்தத்துடன் பாடலை விரிவாகப் பிறகு பார்த்து கேட்டு ரசிக்கலாம்.



சரி யார் இந்த சனி பகவான்.சனி சூரியபகவானுக்கும் சாயதேவிக்கும் பிறந்தவர்.சூரியன் மனைவியான சம்ஞா கணவனின் உக்கிரத்தைப் பொறுக்க மாட்டாமல், நிழலான சாயா என்பவளைப் படைத்து, அவளை தன் கணவனிடம் விட்டுத் தான் தந்தை வீடு சென்று விட்டாள். இந்த சாயாதேவியிடம் சூரியனுக்கு சனி பகவான் பிறந்தார். சம்ஞாவின் புத்திரனான யமன் சனியை உதைக்க, அவன் கால் ஊனமாகியது. மெது வாகத்தான் நடக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டதால் "சனைச்சரன்' (மெதுவாகச் சஞ் சரிப்பவன்) என்ற பெயர் ஏற்பட்டது.
கோணஸ்தன்,பிங்கலன்,பப்ரு,கிருஷ்ணன்,ரௌத்ரன்,

அந்தகன்,யமன்,சௌரி,சனைஸ்வரன்,மந்தன்,பிப்பலன் என்னும் பெயர்களை உடையவன். யமதர்மராஜனுக்கு சகோதரன்.சத்யம் நேர்மை இவற்றிற்கு உறைவிடம். யாருக்கும் பயப்படாமல் தன் கடமையைச் செய்வார். மெதுவாக விந்தி விந்தி காலை சாய்த்து நடப்பவர் என்பதால் சனீ என்றும் சிவனிடம் சண்டைபோட்டு ஈஸ்வரபட்டம் வாங்கியதால் சனீஸ்வரன் என்றும் அழைப்பார்கள்.

இவர் நவகிரக பீடத்தில் சூரியனுக்குத் தென்மேற்குத் திக்கிலிருப்பார். குள்ளமான உருவம், காகத்தை வாகனமாக உடையவர்,பத்மாசனத்தில் அமர்ந்திருப்பவர். வில்வடிவ பீடத்தில் நீளா தேவி, மந்தா தேவி என்ற தம் இரு மனைவியருடன் காட்சிதருபவர். மகர கும்ப ராசிகளுக்கு அதிபதி. இவருடைய தந்தையான சூரியனுக்கும் இவருக்கும் பகை.அதனால் சனிதசை வந்தால் அப்பனுக்கும் மகனுக்கும் சண்டை வரும்.மனைவியை விட்டும் குடும்பத்தை விட்டும் பிரிய வேண்டி வரும்.அதிகுரூர பலன்களைக் கொடுப்பவர்.எலும்பு முறிவு குறிப்பாக காலில் வரும்படி செய்பவர்.
ஆனால் இப்படிப்பட்ட சனிபகவானை தீக்ஷதர் தயாள குனத்தில் அமுதகடல் என்றும், கோரிய வரங்களை அளிப்பதில் காமதேனு போன்றவர் என்று புகழ்கிறார்.எப்படி என்று அடுத்த பகுதியில் பார்க்கலாம்

Monday, December 14, 2009

சனி வழி தனி வழி


ஒரு ஆறுமாதமாக எந்த வேலை எடுத்தாலும் தடங்கல், முனைப்பு இல்லை உடம்பு மிகவும் மோசமான நிலை, அலுவலக காரியங்களும் குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் போனது. போதாக்குறைக்கு பொன்னியம்மா குறைவேறு என்று ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென்று 30௦, 600 என்று தங்கம் விலை மாதிரி ஏறிக்கொண்டு இருந்தது .


அப்பாடா அவ்வளவுதான் என்ற நினைப்பில மண்ணை அள்ளிப்போட்டது மருத்துவ அறிக்கை. உணவுக்குழாயில் இதயத்திற்கு அருகில் மூச்சுக்குழலுக்குமேல் ஒரு சிறிய பை போன்ற குழி இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. அதுபாட்டுக்கு இருந்து விட்டு போகட்டுமே என்றால் சாப்பிடும் போது சில சமயம் உணவு அதில் மாட்டிக்கொண்டு மூச்சுக்குழலை மூடி மயக்கம் வந்து கீழேவிழுந்து கிருஷ்ணாம்பேட்டையா பெஸண்ட் நகரா என்ற கேள்விக்கு விடை காணும்படி ஆகிவிடுகிறது. இதனால் என்ன நான் கொஞ்சமும் கவலைப்படவில்லை(வீட்டில் இருப்பவர்களுக்குத்தனே அதெல்லாம்) பையன்,மாட்டுப்பெண், பேரன், மாப்பிள்ளை, பெண் என்று எல்லோரும் வந்து பார்த்துவிட்டு போயகிவிட்டது. பிளாக் உலக நண்பர்கள் நேரிலும் தொலைபேசி மூலமாகவும் விசாரித்தார்கள்.இவ்வளவு ஆகியும் நம்மிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு மட்டும் போகவில்லை.
என்னுடைய மைத்துனியின் கணவர் காசியில் வேதம் படித்து என்னை மாதிரி லௌகிகத்தில் இல்லாமல் புனிதமான வைதீகத்தில் இருப்பவர்.ஆஸ்பத்திரிக்கு வந்து என்னைப் பார்த்துவிட்டு கேட்டார்'என்ன அத்திம்பேரே இவ்வளவு சீரியாசாக இருந்தும் எனக்கு சொல்லவே இல்லையே என்றார். நான் சொன்னேன் "அப்படியொன்றும் சீரியஸ்சாக இல்லை அப்படியிருந்தால் முதல் தகவல் உங்களுக்குத்தான் வந்திருக்கும்."

சரி வந்தவர்கள் எல்லோரும் போய்விட்டார்கள் இன்னும் ஏன் நிலைமை சரியாகவில்லை என்று பார்த்தால் வந்தவர்களில் ஒருவர் போகவில்லையாம்

சரி இவ்வளவு தூரம் நம்மை ஆட்டிப்படைப்பவர் யார் என்று விசாரித்தால் அவர் ஒன்பதில் ஒருவர். கடந்த சிலமாதங்களாகவே என்னுடன் என் வீட்டிலேயே தங்கியுள்ளார் என்றும் அவர் பெயர் சனீஸ்வரர் என்றும் தெரிய வந்தது

சரி நாம் கூப்பிடாமலேயே அழையாத விருந்தாளியாக வந்தவரைப் பற்றி அறிந்து கொள்ளலாம் என்று எண்ணம் வந்தது. அதை வலைப்பூவில் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணமும் வந்தது.சனீஸ்வரரைப்பற்றி யார் நமக்கு கூறுவார்கள் என்று பார்த்த பொழுது என் தாயரின் நினவு வந்தது. அவள் குளித்துவிட்டு சமையல் செய்யும்போது சொல்லும் ஒரு பாடலில் சில வரிகள் ஞாபகம் வந்தது. " கடன் வேண்டி காத வழி போனாலும் கடனும் இல்லை என்று சொல்லி காலை உடையவைப்பேன் இன்றை வா நாளை வா என்றே இழுக்கடிப்பேன் இப்படியாகப் பட்ட சனீஸ்வர பகாவானின் ஸோத்திரத்தை ஒருநாளும் மறாவாமல் இருதரம் சொன்னவர்க்கு சனியொன்றும் வாரமல் சகலமும் காத்திடுவேன் பசியாது நித்தியம் பார்வதியாள் படியளப்பாள் என்று முடியும்.
இது போதவில்லை வேறு யார் இவரைப்பற்றி துல்லியமாக கூறியிருப்பார்கள் என்று யோசித்தபோது முத்துஸ்வாமி தீக்ஷதர் ஞாபகம் வந்தது. அவரையுமா சனிபகவான் விடவில்லை.

மீதி அடுத்த பதிவில்