Wednesday, December 21, 2011

பரம கிருபாநிதி அல்லவோ


யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்


அதனின் அதனின் இலன்.


வள்ளுவர் துறவு அதிகாரத்தில் இந்தக் குறளை வைத்துள்ளார். இதனுடைய பொருள் எந்த எந்த பொருள்களினாலோ அல்லது அதன் மீது பற்றுவைப்பதாலோ நமக்கு துன்பம் வருமோ அந்த அந்த பொருள்களயோ அல்லது அதன் மீது உள்ள பற்றையோ நீக்கிவிட்டால் நமக்கு அந்தப் பொருள்களினால் வரும் துன்பம் வராது. புரியும்படிச் சொல்லவேண்டும் என்றால் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சர்க்கரையையோ அல்லது அதன் மீது உள்ள அதீதப் பற்றை விட்டுவிட்டால் அவர்களுக்கு அந்தவியதியால் வரும் துன்பம் வராமல் போகும். பற்று என்று கூறும்போது வாயில் உள்ள இரண்டு உதடுகளும் சேரும் இது இயற்கை. இதோ இந்தக் குறளை கூறிப் பாருங்கள்






பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்


பற்றுக பற்று விடற்கு






ஆண்டவனிடத்தில் பற்று வைக்கவேண்டும் என்று கூறும்போது அது நல்ல பற்று என்பதை உணர்த்து வண்ணம் பலமுறை உதடுகள் சேரும்படி பற்று என்ற வார்த்தையை அதிகமாக் கையண்டிருக்கிறார் வள்ளுவர். ஆனால் இந்த "யாதனின்" குறளைக் கூறிப் பாருங்கள் உதடுகள் ஒட்டவே ஒட்டாது. பற்றை முற்றிலும் விடவேண்டிய இடத்தில் அறவே விட்டுவிட்டார். சரி அப்படி பற்று வைக்காமல் வாழ இன்றைய உலகத்தில் ஒரு மனிதனால் வாழமுடியுமா? முடியும் என்பதற்கு ஆதர்ச புருஷராய் திகழ்ந்தவர் ஒருவர் உண்டு.


அவர்தான் இவர்













பெரியவா என்றும் பரமாசாரியார் என்றும் உலகத்தாரால் பெரிதும் வணங்கப்பெற்ற காஞ்சி காமகோடி மடத்தின் 68 வது பீடாதிபதியாகத் திகழ்ந்த ச்ரீ சந்திரசேகரேந்திரசரஸ்வதி ஸ்வாமிகள். இன்றோடு அவர் மஹாசமாதி ஆகி 13 வருடங்கள் ஓடி விட்டன. ஆனாலும் அவருடன் இருக்குபடியான சில சந்தர்ப்பங்களைக் கொடுத்த ஆண்டவனுக்கு என் நன்றி. என் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சாதனை என்று ஒன்று உண்டென்றால் அது அவர் இருந்த காலத்தில் நாமும் வழ்ந்தோம் என்பதே.



துறவையும் துறந்த மஹான் அவர். ஒரு துறவி எப்படி இருக்கவேண்டும் எனபதற்கு உதாரணமாய்த் திகழ்ந்தவர். அவருடைய வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை எனக்கு ஆஞ்சநேய உபாசகரும்,நங்கநல்லூர் மற்றும் பாண்டிச்சேரியிலுள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்களச் ஸ்தாபித்து வழிநடத்திவரும் திரு ரமணி அண்ணா கூறியதை இந்த நாளில் ஒரு பானை சோற்றுக்கு ஒரு அரிசி பதம் போல இங்கு பதிக்கிறேன் பெரியவாளின் திருவடிகள் வணங்கி..





பரமாச்சாரியார் ஒருமுறை வெளியூரில் முகாமிட்டிருந்தார். பூஜையை முடித்துக்கொண்டு மதியம் 3 மணியளவில்தான் அவர் உணவு அருந்தும் வேளை. அவருடைய உணவு மிகவும் எளிமையானது. கொஞ்சம் அரிசிசாதம், எதாவது ஒரு கீரைஅனேகமாக அது அகத்தீ கீரையாகத்தான் இருக்கும்,பழம் இவ்வளவுதான். வெகுகாலமாக அவருடன் கூடவேதங்கியிருந்து அவருக்கு கைங்கரியம் செய்துவரும் ஒருவர்தான் வழக்கமாக அவருக்கு உணவு படைப்பார். தங்கியிருந்த இடமோ ஒரு குக்கிராமம் வசதிகள் ஏதும் இல்லாத ஊர்.



முதல்நாள் உணவை அருந்தினார் பெரியவர் அதில் எதோ ஒரு கீரை பதார்த்தம் இருந்தது. மறுநாளும் அதே கீரையைச் செய்து இருந்தார்கள் பெரியவரும் அதைச் சாப்பிட்டார். இப்படி அதே கீரையுடன் இரண்டு நாட்கள் சென்றன. மூன்றாவது நாளும் பெரியவர் சாப்பிட உட்கார்ந்தார். அவருக்கு கைங்கரியம் செய்பவரும் அதே கீரையை இலையில் இட்டார். ஸ்வாமிகள் கேட்டார் "..... என்ன இன்னிக்கும் அதே கீரையா" என்றார். பரிமாறுபவர் சொன்னார் "இல்லே பெரியவாளுக்கு இந்தக்கீரை பிடித்திருக்கிறது போல. முதல் நாளே பெரியவா கேட்டு ரெண்டாம்தரம் போட்டேன். அதான் பெரியவாளுக்கு இந்த கீரை பிடிக்கின்றதுபோல என்ற எண்ணத்தில் அதையே செய்தேன்" என்றார். இதைகேட்டவுடன் பெரியவர் ஒன்றும் சொல்லாமல் பாதி சாப்பாட்டிலேயே எழுந்துவிட்டார். காஷ்ட மௌனத்திலும் (யாருடனும் பேசாத நிலை)சென்றுவிட்டார்.



பெரியவர் சாப்பிட்டபிறகுதான் மற்றவர்கள் சாப்பிடும் வழக்கம் இதைகேள்விப் பட்டதும் யாரும் மடத்தில் சாப்பிடவில்லை. பரிமாறியவரை அவர்தான் ஏதோ தவறு செய்துவிட்டார் என்று அவரைக் கோபித்துக்கொண்டார்கள். அவரும் அப்படியே நினைத்து இரு கண்களிலும் கண்ணீர் தாரை தாரையாக கொட்ட பெரியவாளிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். பெரியவர்களின் மௌனம் தொடர்ந்தது. ஆனால் காரணம் தெரியவில்லை.



மீதியை நாளைப் பார்ப்போமா



ஜய ஜய சங்கரா ஹர ஹர சங்கர

இப்படி மௌனமாகவே ஒரு மாதம் கழிந்தது.கடைசியில் ஒரு மாதம் முடிந்தவுடன் பெரியவர் காலையில் அனுஷ்டானம் முடிந்தவுடன்" அவனைக்கூப்பிடு' என்றார்.




கேள்விப்பட்டவுடன் அவருக்கு பணிவிடை புரிந்து வரும் அந்த நபர் வந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து

"பெரியவாஎன்னை மன்னிக்கவேண்டும் எனக்கு ஏதாவது தண்டனை கொடுங்கோ" என்றார். மாகான் சொன்னார் "உனக்கு தண்டனை கொடுக்க நான் யாரு? தப்பு செய்தவாதான் தண்டனை அனுபவிக்கனும். நீ ஒரு தப்பும் செய்யலயே." உடனே "இல்லே அன்னிக்கி நடந்ததற்கு நான்தானே காரணம்" என்றர்.



"ஓ அதுவா" என்று புன்சிரிப்புடன் கூறினார் பெரியவர்கள்."நான் ஒரு சன்யாசி.சன்யாஸ தர்மத்தின்படி நாங்கள் எந்தப் பொருளின்மீதும் பற்று வைக்கக்கூடாது.பற்றுவைக்காமல் இருப்பதோடுமட்டுமல்லாமல் அப்படி நாங்கள் இருக்கிறோம் என்பதை உலகுக்கு தெரியப் படுத்தவேண்டும்.சந்யாச தர்மத்தின் படி நாங்கள் ஒரு வேளை சாத்விகமான உணவை உட்கொள்ளவேண்டும். அப்போதுகூட அதன் மீது பற்று இல்லாமல்அருந்தவேண்ண்டும்.அப்பொழுதுதான் நாங்கள் மற்றவர்களுக்கு ஆசையை விட்டொழிக்கவேண்டும் என்றெல்லலாம் உபதேசம் பண்ண ஒரு தகுதி வரும். அன்றும் அதற்கு முதல் நாளும் நீ பண்ண கீரையை நான் சாப்பிடும்போது எனக்கு அதன் மீது ஆசை கிடையாது.ஆனால் நான் சாப்பிட்டவிதமோ. அல்லது என்னுடைய சொல்லோ அல்லது செயலோ அதன் மீது எனக்கு பற்று இருப்பதுபோல ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டது என்று நினைக்கிறேன். அது சன்யாச தர்மத்துக்கு விரோதமான செயல். தப்பு செய்தது நான். அதற்காக நான் எனக்கு தண்டனன கொடுத்துகொண்டேன்" என்றார்.



நீதியைப் பற்றிச் சொல்லும்போது

"நீதியை நிலை நாட்டினால் மட்டும் போதாது நிலை நாட்டிவிட்டதாக எடுத்துக்காட்டவேண்டும்.( It is important to render justice;but it is more important to establish that justice is seems to have been done) இந்த வாசகத்துக்கு உதாரணபுருஷராக வாழ்ந்தவர்தான் ஸ்வாமிகள்











2 comments:

Geetha Sambasivam said...

mmm padichirken. nanri.

மதுரையம்பதி said...

முன்னமே படித்திருந்தாலும், என்றென்றும் படிக்கத் திகட்டாதது....பகிர்ந்தமைக்கு நன்றிகள்.