Monday, February 23, 2009

சம்போ மஹாதேவன்சங்கர கிரிஜா ரமணன்




இன்று சிவராத்ரி.சிவனைப் பற்றி சிந்திக்கவும் அவன் புகழைபாடுவதும் அல்லது பாட்டைக் கேட்பதும் விசேஷம்.ஒரே ஒரு வில்வ இலையை ஆத்மசுத்தியோடு அர்ப்பணித்தால் போதும் ஹரண் மகிழ்ந்து விடுவான்.வேடன் கண்ணப்பனுக்கு அவனளித்த உமிழ்நீரையும்,இறைச்சியையும், அவன் காலால் செருப்படியும் பெற்றுக்கொண்டு அவனுக்கு முக்தி அளித்தநாள்.ராமானையே சிறப்பித்து வாழ்நாள் முழுவதும் பாடிய திரு.தியகராஜஸ்வாமிகள் சிவன் மீது பல பாடல்கள் பாடியுள்ளார். தருமமிகு சென்னக்கும் அவர் வந்திருந்தார்.சென்னை பிராட்வே அருகில் ஐகோர்ட்டுக்கு எதிரில் உள்ள பந்தர் தெருவில் உள்ள(இப்பொழுதும் உள்ளது)சத்திரத்தில் தங்கி இருந்தார்.அங்கிருந்து திருவெற்றியூர் போய் திருபுரசுந்தரியாகிய வடிவுடைய அம்மனின் மீது ஐந்து பாடல்கள் பாடியுள்ளார்.அதே மாதிரி குன்றத்தூருக்கு அருகில் உள்ள போரூரில் உள்ள சிவன் கோவிலில் எழுந்தருளியிருக்கும் சுந்தரேஸ்வரனின்மீது ஐந்து பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றில் ஒன்றுதான் பந்துவராளி ராகத்தில் அமைந்த"" சம்போ மஹாதேவ சங்கர கிரிஜா "" என்ற பாடல்.
ராகம்:-பந்துவராளி. தாளம்:சாபு

பல்லவி

சம்போ மஹாதேவ சங்கர கிரிஜாரமண...(சம்போ)

அனுபல்லவி

சம்போ மஹாதேவ சரணகத ஜனரக்ஷக
அம்போ ருஹலோசன பாதம்புஜ பக்திம்....(சம்போ)

சரணம்

பரமதயாகர ம்ருகதர தரகங்கா தரதணீ
தரபூஷண த்யாகராஜ வரஹ்ருதய நிவேச

ஸுரபிருந்த கிரீடமணி வர நீராஜிதபத கோ
புரவாஸ் ஸுந்தரேச கிரீச பராத்பர பவஹர ...(சம்போ)
சம்போ மஹாதேவா! சங்கரா! மலைமகளான பார்வதியின் அழகியமணவாளா!
கமலக்கண்ணனே, உன்னைச் சரணமடைந்தவர்களை காப்பவனே எனக்கு உன் திருவடியைதொழும் பக்தியைத் தா.

நீ பக்தர்களிடம் மட்டுமல்லாது மிருகங்களிடம் கூடதயவுடையவன்.அதனால்தான் பாம்பை தலையின் மீது ஆபரணமாக அணிந்திருக்கிறாய்.சந்திரனையும் கங்கயையும் முடி மீது வைத்து ஆனந்தத்தில் அமிழ்ந்திருக்கிறாய்.அது மட்டுமல்ல இந்த எளிய தியகராஜனின் தூய உள்ளத்திலும் நிறைந்து உறைகின்றாய்.

தேவர்களின் மணிமுடிகளில் உள்ள ரத்தினம், வைரம்,போன்ற நவரத்தினங்கள் தங்களது பாதராவிந்தங்களை சேவிப்பதால் எழும் ஒளியே தங்களுக்கு தீபராதனையாகும்,கோவூரில் கோவில் கொண்டவன்,ஸுந்தரேசனென்ற பெயருடன் விளங்குபவன்,ஆதியுமந்தமும் இல்லாத பராத்பரன்,மாயப்பிறப்பறுக்கும் மஹாதேவன்.சம்போ மஹாதேவா

பாடலை மும்பை ஜெயஸ்ரீ குரலில் இங்கே கேளுங்கள் ">

Sunday, February 08, 2009

கடல் கடந்த தியாகராஜர்

நங்க நல்லூர் சங்கீத சமாஜம் காரியதரிசி திரு. ராமனாதன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு "சார் இந்ததடவை பிப்ரவரி 8ஆம் தேதியன்று தியகராஜ ஆரதனை வந்து நடத்திக் கொடுங்கள். மதியாணம் சாப்பாடும் உண்டு"என்றார். நான் உடனே "சார் இந்த தடவை வர முடியாது.அந்தத் தேதியில் நானும் தங்கமணியும் சிங்கபூர் மகன் வீட்டுக்கு செல்கிறோம். என்றேன். மனதுக்குள் தாங்க முடியாத வருத்தம் பஞ்ச ரத்ன கீர்தனையை கேட்கமுடியவில்லை என்றா இல்லை இல்லை நல்ல பஞ்ச பட்ச சாப்பாடு போச்சேன்னுதான்.


ஒரு நாள் சிஙகபூரில் என் புரோக்கிராம் மேனேஜெர் என் மகன் "'அப்பா 8 ஆம் தேதி பிப்ரவரி டோபிகாட் அருகில் உள்ள மியுசியம் கண்ணாடி அரங்கில் தியகராஜ உத்ஸ்வம் போகலாமா'' என்றான்.தண்ணீரில் இருந்து வெளியே தவித்துக் கொண்டு இருக்கும் மீன் போல சங்கீதம் இல்லாமல் பாலைவனத்தில் தவித்துக் கொண்டு இருக்கும் எனக்கு ஒரு பாட்டில் குளிர்ந்த மினரல் தண்ணீர் வேண்டுமா என்பது போல் இருந்தது. உடனே சரி யென்று சொல்லிவிட்டேன்.
8 ஆம் தேதி காலை 7 மணிக்கே(நம்ம ஊர் மணி 4.30) குளித்து ஜிப்பா போட்டுக் கொண்டு ரெடியாகி விட்டேன்.ரயில் வண்டி பிடித்து மியுசியம் அரங்கத்துக்குச் சென்றோம். டோபி காட்டில் இறங்கி பொடி நடையாகவே சென்றோம். வழியெல்லாம் தமிழர் கூட்டம்தான். அன்று தைப் பூசம் திருநாள். தமிழர்கள் சாரிசாரியாக டோபிகாட்டில் உள்ள முருகன் கோவிலுக்கு போய்க் கொண்டு இருந்தார்கள். பால் குடம் எடுத்துக் கொண்டு பல பேர்கள். அலகு குத்திக் கொண்டு காவடி எடுத்துக் கொண்டு பல பேர்கள், வெறு காவடி எடுத்துக் கொண்டு பல பேர்கள் இப்படி மக்கள் கூட்டம்தான் அன்று சிங்கையில். இதே மாதிரி எல்லா முருகன் கோவில்களிலும் அன்று கூட்டம்தான்.13 ஆவது ஆழ்வரின் சந்தேகமான யார் தமிழ்க் கடவுள் என்ற கேள்விக்கு விடையை அங்கே பார்க்கலாம்.
எப்படியோ இடத்தைக் கண்டுபிடித்து ஆரம்பித்து இருப்பார்களோ என்ற பயத்தில் போனால் நல்ல வேலை அப்பொழுதுதான் சுருதி கூட்டிக்கொண்டு இருந்தார்கள்.உள்ளே போனால் சிறியவர்களும் பெரியவர்களுமாய் 100 பேர்கள் குழுமியிருந்தார்கள்.சிறுவர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்ததைப் பார்த்ததில் மனதிற்கு நிறைவாக இருந்தது.கொஞ்ச நேரம் வயலின் மற்றும் வீணைக் கச்சேரிகள் நடந்தது.சரியாக 10 30 மணிக்கு மேடையில் 6 பெரியவர்கள் மற்றும் சிறியவர்களும் அமர்ந்து முதலாக ஸ்ரீ கணபதி என்ற சௌராஷ்ட்ர ராகத்தில் அமைந்த தியகராஜரின் கீர்த்தனையை பாட ஆரம்பித்த உடனே களை கட்டி விட்டது. அதன் பின்னர் ஜகதாநந்த தாரகா என்ற நாட்டை ராகத்தில் ஆரம்பித்து கடைசியில் ஸ்ரீ ராகத்தில் கடைசி கீர்த்தனையான எந்தரோ மஹானு பாவலு என்று முடிக்கும் போது மணி 11.30 ஆகிவிடது.நானும் என் மகனும் கையில் புத்தகம் எடுத்துச் சென்றதால் கூடவே பாட முடிந்தது.பாடிக் கொண்டு இருக்கும் ஒரு பெண்மணியின் கையில் ஒரு புத்தகம் இருந்தது. சற்று துல்லியமாகப் பார்த்தால் என்ன ஆச்சர்யம் அது நாங்கள் எங்கள் நங்க நல்லூர் சமஜத்தில் பாடுபவர்கள் எல்லோருக்கும் அளிக்கும் பஞ்சரத்ன கீர்த்தனை ஸ்வரத்துடன் கூடிய புத்தகம்தான் அது.மனதில் நினைத்துக் கொண்டேன் இங்கு முடிவடையும் இந்த 11.30 மணிக்கு அங்கே சரியாக 9 மணிக்கு ஆரதனை ஆர்ம்பிக்கும் என்று. ஆனால் ஒன்று சொல்ல வேண்டும் அங்கில்லாதது இங்கு. பாட்டு ஆரம்பம் முதல் கடைசிவரை எல்லோரும் அமைதி காத்து ஆராதனையை முழுமைபெறச் செய்தனர். நம்மவர்கள் இதை கற்றுக் கொள்ளவேண்டும். அத்தனை ஒழுக்க உணர்வு.நடுவில் எழுந்து போவது வம்பு,கத்தல் அதெல்லாம் மூச் கிடையாது.

ஆரதனை முடிந்து விட்டது வீட்டுக்கு போகலாமா? என்றான் என்மகன். நானும் சரியென்று அரை மனதுடன் கிளம்புவதற்காக வெளியே வந்தோம். என்ன அரைமனது என்கிறீர்களா? வேறு ஒன்றுமில்லை இதே நங்க நல்லூராக இருந்தால் நல்ல சாப்பாடு இருந்திருக்கும். வெளியே வந்ததும் 'சார் பிரசாதம் வாங்கிக்கொள்ளுங்கள்"என்று ஒரு குரல் ஆறாவது கீர்தனையாக இனிமையாக ஒலித்தது.சரி எதோ சுண்டலோ லட்டோ தரப் போகிறார்கள் என்று பார்த்தால் என்ன ஆச்சர்யம் ! நல்ல தெர்மகோல் பாக்ஸில் பேக் செய்யப்பட்டு அதனுள்ளே புளியஞ்சாதம், ரவகேசரி, கொத்துக் கடலை சுண்டல், தயிர்சாதம், சோயா மில்க் ஒரு ஆரஞ்சு பழம் எல்லாம் கொடுத்தார்கள்.இப்படி காதுக்கும் வயிற்றுக்கும் உணவளித்த சிங்கை வாழ் தியாகராஜ பக்தர்கள், சங்கீத ரசிகர்கள்வாழ்க என்று வாழ்த்திவிட்டு வீடு திரும்பினோம். தியாகராஜர் ஒருவேளை உண்ண உணவுக்கு கஷ்டப் பட்டார் என்று படித்திருக்கிறேன் ஆனால் அவர் பெயரால் இன்று லட்சோப லட்சம் பேர் உலகெங்கும் உணவு அருந்தும்படியாக அவரது நாமமும் கீர்த்தனைகளும் சிறப்பான பணியை செய்து கொண்டு இருக்கின்றன."'எந்தரோ மஹானுபாவலு அந்தரிக்கி வந்தனமு"'