Showing posts with label சிவார்ப்பணம்-3. Show all posts
Showing posts with label சிவார்ப்பணம்-3. Show all posts

Friday, March 05, 2010

பிரதோஷ மஹிமை-3

பிரதோஷப் பதிவில் அம்பி ஒரு கேள்வி கேட்டிருந்தார். பிரதோஷவேளை சமயத்தில்தானே நரசிமஸ்வாமியும் அவதரித்தார் என்று. நானும் ஆமாம் என்று சுருக்கமாக சொல்லியிருந்தேன்.பின்பு யோசித்துப் பார்த்ததில் அதற்கு பதில் ஒரு பதிவாகவே போட வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அதன் விளைவே இந்தப் பதிவு.
இஷ்டத் தெய்வத்தை உபாசிப்பவர்கள் அந்த வழிபாட்டையே சிலாகித்துப் போற்றலாம். ஆனால் மற்ற தெய்வங்களை தூஷிக்கலாகது.உற்றுப்பார்த்தால் ஹரியும் ஹரனும் ஒன்றுதான் என்ற உண்மை புலப்படும் .

பிரதோஷகாலத்தில் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் சம உரிமை உண்டு.இதை நாம் புரிந்து கொண்டு கடை பிடிக்கவேண்டுமென்றால் பண்டர்பூரில் அவதரித்த மஹான் நரஹரி சோனாரின் வாழ்க்கையை படித்தால் போதும்


நரஹரி என்பவர் விட்டல பாண்டுரங்கன் இருக்கும் பண்டர்பூரில் தங்க நகைகள் செய்யும் குலத்தில் பிறந்தவர்.அவரை எல்லோரும் நரஹரி சோனார் என்று அழைப்பார்கள்.அந்தத் தொழிலில் அவரை யாரும் மிஞ்சமுடியாத அளவு கீர்த்தி பெற்றிருந்தார்.அவர் வசித்த இடமோ பாண்டுரங்கன் கோவிலுக்கு மிக அருகாமையில் உள்ள மாஹத்துவாரம் எனப்படும் இடம்.நரஹரியோ தீவீர சிவ பக்தர்.சிவனைத்தவிர வேறு தெய்வத்தை வழிபடமாட்டார். இவ்வளவு ஏன் பண்டர்பூருக்கு ஏராளமான பேர் வந்து விட்டலனை தரிசனம் செய்தாலும் இவர் மட்டும் கோவிலுக்கு சென்றதோ பாண்டுரங்கனை வழிபட்டதோ கிடையாது.பாண்டுரங்கனுக்கு விழா நடைபெரும் நாட்க்களில் ஊரைவிட்டே சென்றுவிடுவார் விட்டலா விட்டலா என்ற நாமம் காதில் விழக்கூடாதாம்.ஊரில் உள்ளோர் யவருக்கும் இது தெரியும்.

ஒரு சமயம் வெளியூரிலிருந்து ஒரு பணக்கார பாண்டுரங்க பக்தர் வந்தார். அவர் வந்த விஷயம் நெடுநாட்களாக அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து விட்டலனின் அருளால் ஒரு மகன் பிறந்தான்.அவருக்கு வேண்டுதல் மகன் பிறந்தால் பாண்டுரங்கனுக்கு கேசாதி பாதம் தங்க நகைகள் செய்து போடுவதாய்.ஊரில் விசாரித்ததில் எல்லோரும் நரஹரியின் பேரைத்தான் சொன்னார்கள். அவரும் நரஹரியின் வீட்டிற்கு சென்று கதவை தட்டினார். உள்ளே நரஹரி நமச்சிவாய நமச்சிவாய என்று பஞ்சாட்ஷர மந்திரத்தை செபித்துக்கொண்டு இருந்தார்.வந்த விட்டல பக்தரும் என்ன என்ன நகைகள் செய்ய வேண்டும் என்று பட்டியலைக் கொடுத்தார்.அதை வாங்கிப் பார்த்த நரஹரியும் யாருடைய அளவிற்குச் செய்ய வேண்டும் என்றார்.

பக்தர் சொன்னார் நகைகள் யாவும் பாண்டுரங்கனுக்கு என்றும் தன்னுடைய வேண்டுதலையும் எவ்வளவு வேண்டுமனாலும் பணம் தருவதாகவும் சொன்னார். கேட்டவுடனே நரஹரி மிகுந்த கோபத்துடன் வந்தவரை வெளியே போகச் சொல்லி பாண்டுரங்கனின் பேரைகூடச் சொல்லமாட்டேன் அவனுக்கு நான் நகை பண்ணுவதா என்றார்.பக்தரோ விடுவாதாக இல்லை. அவர் காலைப் பிடித்துகொண்டு கதறி எப்படியாவது நகைகள் செய்து தரவேண்டும் இல்லையென்றால் வேண்டுதலை நிறைவேற்ற முடியாத பாவியாகிவிடுவேன் என்று கெஞ்சினார்.

நரஹரியும் மனது இரங்கி போனால் போகட்டும் நான் கோவிலுக்கு வரமாட்டேன் பாண்டுரங்கனையும் பார்க்கமாட்டேன் என்வீட்டிலேயே இருந்துகொண்டு என்னுடைய தொழில் அனுபவத்தின் துணையோடு நகைகள் செய்து தருகிறேன் நீயே பாண்டுரங்கனுக்கு சாத்தவேண்டும் என்று கூறி விட்டு மிக நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் அளவுடனும் நகைகளைச் செய்து கொடுத்தார்.

பக்தரும் அதை அப்படியே வாங்கிக்கொண்டு பாண்டுரங்கன் கோவிலுக்கு வந்து நகைகளை விட்டலனுக்கு சாத்தினார். எல்லா நகைகளும் சரியாக நேராக வந்து அளவெடுத்துச் செய்தமாதிரியே இருந்தது ஒரு நகையைத்தவிர. அதுதான் விட்டலனின் அரைஞாண்கயிறு. அதைச் சாத்தியபோது இரண்டு விரக்கடை அளவு கம்மியாக இருந்தது. பக்தரும் மறுபடியும் நரஹரிவீட்டுக்கு ஓடிச் சென்று அரைஞாண் கயிறு அளவு போதவில்லை என்று கூறினார்.நரஹரிக்கு நம்பிக்கையில்லை இருந்தாலும் உடனே இரண்டு விரக்கடை அளவு கூட வைத்து செய்து போட்டுப் பார்க்கச் சொன்னார்.

அதனை எடுத்துக்கொண்டு மறுபடியும் கோவிலுக்குச் சென்று விட்டலனுக்கு அணிவித்துப் பார்த்தார். என்ன ஆச்சர்யம் இந்த முறை அரைஞாண் கயிறு இரண்டு விரக்கடை கூட இருந்தது. மறுபடியும் நரஹரி வீட்டுக்கு திரும்பி வந்து நடந்ததை சொன்னார். நரஹரிக்கு நம்ம முடியவில்லை. அவரது தொழில் திறமை மீது அவருக்கு அசாத்திய நம்பிக்கை. ஏன் ஊர் ஜனங்களே நம்ப வில்லை.என்ன செய்வது என்று அவருக்கும் புரியவில்லை. தன்னை நம்பிய பக்தரையும்கைவிட மனமில்லை. என்ன செய்யலாம் என்று யோஜிக்கலானார். விஷயத்தைக் கேள்விப்பட்ட ஊர் ஜனங்களும் நரஹரியின் வீட்டு வாசலில் நரஹரி கோவிலுக்குள் செல்லாமல் பாண்டுரங்கனைத் தொட்டு அளவெடுக்காமல் எப்படி சரி செய்யப் போகிறார் என்பதைக் காண குழுமி விட்டனர்

மறுபகுதியை அடுத்த போஸ்டில் பார்க்கலாமா?