Showing posts with label சிவார்ப்பணம் 1. Show all posts
Showing posts with label சிவார்ப்பணம் 1. Show all posts

Sunday, February 28, 2010

பிரதோஷ மஹிமை--1



சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்புகூட பிரதோஷ நேரத்தில் இவ்வளவு பக்தர்கள் கூட்டம் அலைமோதியதில்லை. இன்று சின்னஞ்சிறு சிவாலயத்தில்கூட அடியார் திருக்கூட்டத்தின் பெரிய அணிவகுப்பு! வில்வ இலையும் அருகம்புல்லும் அபிஷேகத்துக்கென பால் பாக்கெட்டுமாகத் திரண்டுவிடுகிறார்கள். நமசிவாயத்தின் சிறப்பை நாடறிந்துவிட்டது. அன்று உலகைக் காப்பதற்காக நஞ்சுண்டவனுக்கு, இன்று குளிரக்குளிர பாலபிஷேகம்! அபிஷேகப்பிரியன் ஆனந்தப்படுகிறான். அவனை வழிபடும் அத்தனைபேரையும் ஆனந்தப்படுத்துகிறான். நம பார்வதிபதயே! ஹரஹர மகாதேவா!!

பிரதோஷ காலம் சூரியாஸ்தமனத்தோடு தொடங்குகிறது. பிரதோஷ காலம் பரமேச் வரனைத் தியானம் செய்வதற்குத் தகுந்த காலமாகும். அதாவது ஈசுவரன் தன் வசப்படுத் திக் கொள்ளும் காலம் மிகவும் விசேஷமாகும்.
உலகம் ஒடுங்குகிறது; மனம் ஈசுவரனிடம் ஒடுங்க அதுவே நல்ல நேரம். பகலின் முடிவு, சந்தியா காலத்தின் ஆரம்பம். சிருஷ்டி முடிவு பெற்று தன் ஸ்வரூபத்தில் அடக்கிக் கொள்ளும் நேரம்.
வில்லை விட்டு அம்பு சென்று விட்டாலும், மந்திர உச்சாரண பலத்தால் அந்த அம்பை உபசம்ஹாரம் செய்வது போல ஈசுவரன் தான் விட்ட சக்தியை எல்லாம் தன் வசப்படுத்திக் கொள்கிறான்.

பிரதோஷ காலத்தில் ஈசுவரன் எல்லாவற் றையும் தன்னிடம் அடக்கிக் கொள்வதால் வேறொரு வஸ்து இல்லாத நேரமாக அது அமையும்.
உதயத்தில் சிருஷ்டியும் பிரதோஷ காலத்தில் சம்ஹாரமும் நடக்கின்றன. இராத்திரி ஆரம்பத்தைத் தான் பிரதோஷ காலம் என்கி றோம். அதனால் தான் இரவு நித்திய பிரளய காலமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. நித்திய சிருஷ்டியும், நித்திய பிரளயமும் நடக்கின்றன. பறவைகள், பசுக்கள் முதற்கொண்டு ஒடுங்கிக் கொள்கின்றன. குழந்தைகள் கூட, தம் விளையாட்டை முடித்துக் கொண்டு வீட்டிற்குள் ஒடுங்கிக் கொள்கின்றன.

அந்தக் காலம்தான் சித்தத்தை ஏகாந்தமாக லயிப்பதற்குத் தகுந்த காலம். ஒருவராக இருந்து, நித்திய பிரளய நேரத்தில், நடராஜர் நடனம் செய்கிறார். எல்லாம் அதில் லயித்து விடுகின்றன.

பிரதோஷ வேளைகளில், பரமேசுவரன் உலக சக்தி முழுவதையும் தன் வசம் ஒடுக்கிக் கொண்டு நர்த்தனம் செய்யும் வேளையில், நாம் ஈச்வரனையே வழிபடவேண்டும்.

பிரதோஷ கால மகிமையை விளக்கும் புராண வரலாற்றுக் கதையைப் பார்ப்போம்.

ஒரு முறை திருப்பாற்கடலில் அமரர்களும், அசுரர்களும் ஒன்று திரண்டனர். மந்திர மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம் பைக் கயிறாகவும் பூட்டி அமிர்தம் பெற பாற் கடலைக் கடைந்தனர்.
ஸ்ரீமந் நாராயணனின் தந்திரப்படி சர்ப்பத் தின் வாலைத் தேவர்களும் தலையை அசுரர் களும் பிடித்துக் கொண்டு அமிர்தம் எடுக்க கடைந்து கொண்டிருந்தனர்.
விஷாக்கினி ஜுவாலையுடைய வாசுகியின் பெருமூச்சுக் காற்றினால் அசுரர்கள் தேஜஸ் குறைந்து, பராக்கிரமமும் மறைந்து பலவீனர்கள் ஆயினர்.
அதே சமயம், வாசுகியின் சுவாச வேகத் தினால் மேகங்கள் அங்குமிங்குமாக அடித்துத் தள்ளப்பட்டு வால் பக்கம் பெரு மழையைப் பொழிந்தன. அப்பொழுது கடல் பொங்கியது. அனைவரும் அஞ்சினர். மந்திர மலை உள்ளே அழுந்தத் தொடங்கியது.
ஸ்ரீமந் நாராயணன் கூர்மாவதாரம் எடுத்து குவலயம் காத்தார். அமரர்களுக்கு அரும்பெரும் சகாயம் செய்தார்.
ஸ்ரீயப்பதியின் திருவருளால் திருப்பாற் கடலிலிருந்து சகல தேவர்களும், முனிவர்களும் பூஜித்து வரும் காமதேனு உதயம் ஆயிற்று. பின்னர் வாருணி தேவி வந்தாள். பரிமளமான பாரிஜாத வ்ருக்ஷம் தோன்றியது. ஜகன் மோகன ரூபலாவண்ய அப்சரஸ் பெண்கள் வந்தனர். குளிர்ச்சி தரும் சந்திரன் வந்தான்.
கங்கையைத் திருச்சடையில் தாங்கிய சங்கரன் சந்திரனையும் சூடிக் கொண்டு சந்திரசேகரன், சந்திரமௌலி என்று பெயர்க்கீர்த்தியும் பெற்றார்

இத்தருணத்தில், கயிறாக அப்படியும், இப்படியுமாக இழுக்கப்பட்ட வாசுகி வேதனை தாளாமல் விஷத்தைக் கக்கியது.
அந்த ஆலகால விஷம் கார் காலம் போல் கருமை நிறம் சூழ்ந்து மலைபோல் ஓங்கி உயர்ந்து வடமுகாக்கினியைப் போல் சீறிப் பாய்ந்து மேலும் மேலும் எழுந்தது.
அமரர்கள் அஞ்சி நடுங்கினர். அபயம் தேடி நாரணனையும், நான்முகனையும் நாடினர். அவர்களும் விஷத்தின் கொடுமையைக் கண்டு வியந்தனர். அனைவரும் ஒன்று கூடி கயிலாய மலைக்குப் புறப்பட்டனர்.
“மகா தேவா! கங்காதரா! சர்வலோக ரக்ஷகா சரணம்! சரணம்! அருள் தரும் அண்ணலே அபயம்! அபயம்!” என்று பெரு முழக்கமிட்டுக் கொண்டு, திருக்கயிலைத் திருமாமலையை வந்தடைந்தனர்.
பனிமலை போல் விளங்கும் சிவன் கோவிலில் நவரத்தின மணிபீடத்தில் சிவபெருமான் அருட்பெரும் ஜோதியாக ஆதியும் அந்தமும் அற்ற பெருந்தகையாய் முழுமுதற் பரம்பொருளாய் இமயவல்லி அம்மையுடன் எழுந்தருளியிருந்தார்.

சிவக் கோவிலின் திருவாயிலிலே நந்திதேவர் பொற்பிரம்பும், உடைவாளும் ஏந்தி காவல் புரிந்து நின்றார்.
கடல் போல் திரண்டு வந்த தேவர்கள் நந்திதேவரை வணங்கினர்.
“நந்தி தேவா! நமஸ்கரிக்கின்றோம். திருப்பாற்கடலில் விஷம் பொங்கி வந்துள்ளது. அதனை அணுக இயலாத நாங்கள் அச்சமுறுகிறோம். அதற்கு ஒரு மார்க்கம் காண சர்வலோக ரக்ஷகரான சர்வேஸ்வரனைக் காண வேண்டும்.”
இவ்வாறு அமரர்கள் வேண்டுகோள் விடுத்ததும் நந்திதேவர் அவர்களை திருவாயி லின் முன்னே நிறுத்திவிட்டு, சிவபெருமானி டம் சென்றார்.
நந்திதேவர், உள்ளே சென்று எம்பெருமானி டம் திருவாயிலில் தேவர்கள் காத்திருப்பதையும் திருப்பாற் கடலில் விஷம் பொங்கி எழுந்துள்ள தால் உடனே ஐயனைத் தரிசிக்க வேண்டும் என்று விண்ணப்பித்ததாகவும் கூறினார். சிவபெருமான் தேவர்களை உடனே உள்ளே அழைத்து வருமாறு ஆணையிட்டார்.

நந்திதேவர் ஐயனை நமஸ்கரித்து வெளியே வந்தார். தேவர்களை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார். தேவர்கள் சென்னி மீது கரம் உயர்த்தி நமஸ்கரித்து நாதனைப் போற்றித் துதித்தனர்.
“லோக நாயகா! விடையேறும் பெரு மானே! விஷம் பொங்கி வருகிறது திருப்பாற் கடலில். காத்தருளுவீர் கயிலை வாசா!”
சிவபெருமான் அமரர்களைக் காக்கத் திருவுள்ளம் கொண்டார்.
தொண்டர்களுக்காக இன்பத்தையும், துன்பத்தையும் தாங்கும் கருணாமூர்த்தியல்லவா சிவபெருமான்!
நொடிப் பொழுதில் அவ்விஷத்தைத் திருக் கரத்திலே வாங்கிக் கொண்ட எம்பெருமான் “தேவர்களே! இவ்விஷத்தை யாம் உண்டு விடவா? அல்லது விட்டுவிடவா?” என்று வினவினர்.
விஷத்தின் உக்கிரத்தால், அஞ்சி நடுங்கி யவாறு நின்று கொண்டிருந்த அமரர்கள் “தேவர் இதனை விட்டுவிட்டால் இவ்விஷம் உலத் தையே அழித்து விடும். அதனால் ஐயன் உகந்த வழி செய்க” என்று வேதனையுடன் விண்ணப் பித்தனர்.

மீதியை அடுத்த பதிவில் பார்க்கலாமா