Friday, January 11, 2013

ஸ்ரீ ஹனுமனை துதி மனமே தினமே



ஸ்ரீ ராம ஜெயம்

இன்று ஹனுமத் ஜயந்தி

மாதவம் செய்த மாதவள் அஞ்சனை மடிதனில் மலர்ந்தவனாம்
மாதவன் ராமன் தூதுவன் என்றே மாகடல் கடந்தவனாம் ---(மாதவம்)

ராமனைப் போற்றிப் பாடிடும் நேரம் ரகசியமாய் வருவான்
கைத் தாளங்கள் போட்டு ஆனந்தமாக மனங்குளிர்ந்தே மகிழ்வான்
கண் மடல் மூடிமெய் மலர் சூடி செவி மடல் திறந்திடுவான்
நாதனின் காதை யாவும் கேட்டு விழி மழை சொரிந்திடுவான் ---(மாதவம்)


ராமனை நெஞ்சில் மாமலை கையில் சுமந்திடும் ஜெய ஹனுமான்
பீமனை அள்ளி மார்புடன் சேர்த்து அணைத்திடும் ஜெய ஹனுமான்
சந்தன வாசம் வீசிட எங்கும் வலம் வருவான் ஹனுமான்
நித்திலம் தன்னில் நித்தியம் வாழ்ந்து ஜெயம் தரும் ஜெய ஹனுமான்.. மாதவம்)


கோமகனாக வாழ்ந்திடும் சீலன் கோயில் நாம் அடைவோம்
கோசலை ராமன் நாமத்தைப்பாடி அவனருள் வேண்டிடுவோம்
வீழ்ச்சியை மாற்றி மீட்சிகள் சேர்க்கும் பாடிடு அவன் மகிமை
வான் மழை போல பூமழை வார்க்கும் மாருதி அவன் கருணை ---(மாதவம்)


வீர பராக்கிரமம் இருப்பினும் அரசகுலத்து அந்தஸ்துகள் இருப்பினும், புத்தி விசாலம் இருப்பினும் ,ஒருபடையை நிகர்த்த பலமுள்ள உடன் பிறப்பு கூடவெ இருப்பினும்,விதியின் வலியால் மனைவியை ஸ்ரீ ராமன் பிரிய நேரிட்டது.

மாதர்களை மனதளவிலும் தீண்டாத பிரும்மச்சாரி, கடும் ஒழுக்க சிந்தனை உடையவரும், புலன்களை அடக்கி ஆண்டு அதன் மீது ஆட்சி செலுத்த வல்லவரும்,இணயில்லாத பலம் மிக்கவரும்,அதே நேரம் பணிவும், பக்தியும் மிகுந்தவரும், இனிமையாகபேசுபவரும்,பேச்சில் வல்லமை உடையவரும்,சோர்வே இல்லாதவரும், தர்மத்தின் பக்கம் நிற்பவருமான ஸ்ரீஆஞ்சநேயரின் துணை தேவைப் பட்டது.ஒழுக்கமும், தர்மமும்தான் பொய்மையை வெல்ல மிக உதவி செய்யும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.வெறும் புஜ வலிமை போதாது.

மனித மனம் ஒரு வானரம். அதை அடக்கி ஆண்டு ஆட்சி செய்கிற விஷயம் ஹனுமான்.அப்படி அடக்கி ஆண்டதை அலட்டாது மிக வினயமாக எங்கு பார்த்தாலும் கைகூப்பி அமைதியாக புன்சிரிப்போடு ஹனுமான். தன்னை பாராட்டிக் கொள்ளாமல் தன் பலம் எத்தகையது என்றுதானே ஆராய்ச்சி செய்யாமல் பலம் இருக்கிறதா, இருந்து விட்டு போகட்டுமே என்று மிக மிக வினயமாக நின்ற நிறைகுடம் ஸ்ரீஹனுமான். அலட்டலும், அஹம்பாவமும் வாழ்க்கையாகப்போன இந்தக் காலத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயரின் பராக்கிரமத்தை படிக்கிறபொழுது நாம் ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் மிகுந்து வருகிறது. சுந்தர காண்டம் ஒரு மனிதனுக்கு ஏற்பட்ட துக்கத்தை மட்டும் சொல்லித்தரவில்லை. அதற்கு ஏற்பட்ட விடிவு நேரத்தையும் விவரிக்கிறது. மிகப் பெரிய நம்பிக்கையை ஊட்டுகிறது. நீங்கள் வெற்றி பெற்றாலும் புன்சிரிப்போடு நன்றி என்று சொல்லிவிட்டு அமைதியாக இருக்க உங்களுக்கு உதவும்.
ஜய ஜய ஹனுமான் கோஸாயி
கிருபா கரஹூ குருதேவெ கீ நாயீ

4 comments:

RAMA RAVI (RAMVI) said...

ஹனுமத் ஜயந்தி அன்று தங்களின் பதிவின் மூலமாக ராம ஆஞ்சநேயர் தரிசனம் கிடைத்தது.
நன்றி பகிர்வுக்கு.

இராஜராஜேஸ்வரி said...

அலட்டலும், அஹம்பாவமும் வாழ்க்கையாகப்போன இந்தக் காலத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயரின் பராக்கிரமத்தை படிக்கிறபொழுது நாம் ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் மிகுந்து வருகிறது. சுந்தர காண்டம் ஒரு மனிதனுக்கு ஏற்பட்ட துக்கத்தை மட்டும் சொல்லித்தரவில்லை. அதற்கு ஏற்பட்ட விடிவு நேரத்தையும் விவரிக்கிறது. மிகப் பெரிய நம்பிக்கையை ஊட்டுகிறது.

ஹனுமத் ஜெயந்திக்கு
அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

Ranjani Narayanan said...

அழகான ஆஞ்சநேயரின் படங்களும் தகவல்களும் அருமை!
வலைசரம் மூலம் வந்தேன்.
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்!
http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_18.html

இராஜராஜேஸ்வரி said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_18.html