Friday, January 05, 2007

கடல் கடந்த இசை.

இசைக்கு மொழி ஒருதடை கிடையாது என்பதை நான் சமீபத்தில் கேட்ட கச்சேரி உறுதிப்படுத்தியது. இசை எல்லா மக்களுக்கும் பொதுவானது. சிங்கப்பூரிலிருந்து ஒருவர் சென்னை வந்து ஒரு முழுநேர கர்னாடக இசைக் கச்சேரி நிகழ்த்தினார். இது என்ன அதிசயம் உலகெங்குமிலிருந்துதான் வந்து கலந்துகொண்டு நடத்துகிறார்களே என்கிறீர்களா? ஆனால் நான் சொல்லும் ஆள் தமிழ் வாசனையே இல்லாதவர். இந்தியவம்சாவளியைச் சேர்ந்தவரும் அல்ல. அவர் பெயர்.திரு.லோகாலியான்(MR.LOWKOLEON). அவர் ஒரு சிங்கப்பூர் வாழும் சைனா வம்சாவளியைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக சிங்கப்பூரில் கர்நாடக இசையை சிறப்பாக கற்பித்து வரும் திருமதி.பகவதியிடம் சங்கீதம் பயின்று வருகிறார்.

வெறும் பொழுதுபோக்குக்காகமட்டும் கற்காமல் அதில் தனிக் கச்சேரி செய்யும் அளவிற்கு தைர்யமும், திறமையும் பெற்றுள்ளார் என்பது அவர் சென்னையில் நிகழ்த்திய இரண்டு கச்சேரிகளில் கண்டேன். சென்னையில் நாரத கான சபா சிற்றரங்கத்தில் நடைபெற்ற அவரது கச்சேரி அரைமணி நேரம் ரமணி சங்கீத அகடமி சார்பில் நடைபெற்றது. விழாவிற்கு வேய்குழல் வேந்தன் திரு. ரமணி அவர்கள் வந்திருந்து முழுக்கச்சேரியையும் கேட்டு பாராட்டினார் என்றால் கச்சேரியின் வெற்றியைப்பற்றி நான் தனியாகச் சொல்ல வேண்டுமா என்ன?

மேடைக்கு வந்து அமர்ந்தவரைப் பார்த்தால் அப்படியே நம்ம ஊர் வித்வான்போல் ஜிப்பாவும் ஜரிகை வேஷ்டியும் அணிந்து கலக்கலாக இருந்தார். அவருக்கு பக்கவாத்தியமாக திருமதி.ஜெயந்தி கேசவ், மிருதங்கம் திரு. சஞ்சைவாசன். சாமி நின்னேகோரி என்ற ஸ்ரீ ராக வர்ணத்துடன் கச்சேரியை ஆரம்பித்து நன்றாகப் பாடி கைத்தட்டலையும் வாங்கினார்.பின்பு. கடினமான ருத்ரப்ரியாவில் கணநாயகம் பஜே என்ற தீக்ஷதர் கிருதியையும் நன்கு வழங்கினார். அன்று அவர் பாடிய மற்ற பாடல்கள்:-
தெலிசிராம சிந்தனதோ------ பூர்ணசந்திரிகா ராகம்-----------தியகராஜர்

பண்டுரீதகொலு வைய்ய ராமா-----ஹம்சநாதம்ராகம்---தியகராஜர்

ஏகலி மானுஷ ---------ரேவதிராகம்------------------அன்னமாச்சர்யா

ஏறுமயில் ஏறிவிளயாடு முகம்------மோகனம்ராகம்-----திருப்புகழ்-
அருணகிரிநாதர்
பாக்யாதா லக்ஷ்மி பாரம்மா----ஸ்ரீராகம்------புரந்தரதாசர்

ஏழுபாடல்களையும் தெலுங்கு,ஸம்ஸ்கிருதம்,தமிழ் மற்றும் கன்னடம் மொழிகளில் மிகச் சிறப்பாக மொழிச்சிதைவு இல்லாமலும்,ஸ்ருதியுடனும்,லயத்துடனும் அளித்தது சிறப்பாக இருந்தது. நம்மவர்களே "சங்கரி சங்குரு சந்திரமுகிஎன்ற அருமையான கீர்த்தனத்தை" ஷன்கரி ஷன்குரு ஷந்திரமுகி" என்று பாடுவதைப் பார்க்கும்போது சைனாக்காரராக இருந்தாலும் இவருடை உச்சரிப்பை பாராட்டியே தீரவேண்டும். அதுவும் தெலிசிராம கீர்த்தனையில் அவர் அளித்த சிட்டஸ்வரங்களின் பங்களிப்பு தரம் வாய்ந்ததாக இருந்தது. நம்முடைய சங்கீதத்தின் மீது இவருக்கு இருக்கும் பற்றும்,ஸ்ரத்தையும், குருபக்தியும்தான் கச்சேரியை நன்கு பரிமளிக்கச்செய்தது என்றால் அது மிகையாகாது.உண்மையான புலமையெனில் அதை வெளிநாட்டார் கண்டு வணக்கம் செய்திடல் வேண்டும் என்றானே மஹாகவி பாரதி அதை மெய்ப்பிப்பதுபோல இருந்தது அன்றைய கச்சேரி. பக்க வாத்தியம் வசித்த ஜெயந்தியும் சரி சஞ்சைவாணனும் சரி தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதைவிட படகரின் திறமைக்கு ஏற்ப அனுசரனையுடன் அடக்கி வாசித்தது கச்சேரியை நன்கு பரிமளிக்கச்செய்தது

குரு திருமதி.பகவதியிடம் பேசும்போது சொன்னார் இந்ததடவை புதுமையாக இவரை மேடை ஏற்றிவிட்டேன் அடுத்தமுறை சிங்கப்பூரில் இவரிடம் பயிலும் ஒரு இளம் தம்பதியினரை மேடை ஏற்றப்போகிறாராம். அபாரத்துணிச்சல்தான் இவருக்கு.

13 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

Sorry i am not in position to give the autio vertion of the concert

jeevagv said...

வாவ்!, இதுபோல ஆப்ரிக்கவில் இருந்து வந்து நம் சங்கீதம் கற்றவர் பற்றிய செய்தி ஒன்றை முன்பொருமுறை பதித்திருந்தேன்:
http://jeevagv.blogspot.com/2005/04/blog-post_16.html

//நம்முடைய சங்கீதத்தின் மீது இவருக்கு இருக்கும் பற்றும்,ஸ்ரத்தையும்,..//
நம் நாட்டில் இருப்பவரில் 10 சதவீதம் பேராவது 'நம்ம சங்கீதம்' என்று நினைத்தால் போதாதோ?

தி. ரா. ச.(T.R.C.) said...

@ஜீவா நீங்கள் சொல்வது சரிதான்.அன்று என்பதிவில் சொல்லாத விஷயம் அந்த கச்சேரிக்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு 15 பேர்கள்தான். ஆனால் நீங்கள் நம்ப மாட்டீர்கள் சீர்காழி சிவசிதம்பரம் கச்சேரியன்று நாரத கான சபா 1000 பேர் அமரும் பெரிய ஹாலில்கச்சேரி ஆரம்பிக்குக் போது இருந்தவர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 9 பேர்தான்.மேடையில் பக்கவத்தியக்காரருடன் சேர்த்து 12 பேர்.

Simulation said...

லோகாலியானது படம் போட முடியுமா?

தி. ரா. ச.(T.R.C.) said...

@சிமுலேஷன் கைவசம் படம் இல்லை. வாங்கி போட முயற்சி செய்கிறேன். வருகைக்கு நன்றி.

ambi said...

நம் நாட்டில் இருப்பவரில் 10 சதவீதம் பேராவது 'நம்ம சங்கீதம்' என்று நினைத்தால் எவ்வளவு நல்லா இருக்கும்!
Nice Review! :)

//அந்த கச்சேரிக்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு 15 பேர்கள்தான்.//

சபா கேன்டீன்ல எவ்ளோ பேர்?னு பார்த்தீங்களா? முந்திரி பக்கோடா தான் கச்சேரியோட ஹைலேட்டே!னு ஒரு மாமா சொன்னதா கேள்வி! :)

தி. ரா. ச.(T.R.C.) said...

@அம்பி நீ சொல்வது ரொம்பச் சரி . உன்வாய்க்கு கேசரிதான் போடவேண்டும்.சபாவின் உள்ளே இருக்கும் கூட்டத்தைவிட கேன்டீனில்தான் நல்லகூட்டம்.இந்த தரம் மியுசிக் அகடமியில் விவாதமே ஏன் அறுசுவை நடராஜன் கேன்டீன் போடவில்லை என்பதுதானாமே.

இலவசக்கொத்தனார் said...

அந்த காலத்து ஹிக்கின்ஸ் பாகவதர்தான் ஞாபகத்துக்கு வந்தார். :)

மெளலி (மதுரையம்பதி) said...

அறிந்து கொள்ளும் ஆர்வமும், கடின உழைப்பும், என்றும் வெல்லும் என்பதாக தெரிகிறது....இங்கு மேலும் சரியான குரு கிடைத்திருக்கிறார். வாழ்க அவர் பணி...

தி. ரா. ச.(T.R.C.) said...

@இலவசம் வருகைக்கு நன்றி.ஆமாம் நீ சொல்வது சரிதான் ஜான் ஹிக்கின்ஸ்தான். இப்போது அவ்ர் பையன் கூட பாடுகிறானாமே?

தி. ரா. ச.(T.R.C.) said...

@மௌலி நீங்கள் சொல்வது சரிதான். குரு கிருபை இல்லாமல் ஒன்றும் நடக்காது.குரு லேக எடுவந்தி என்ற கீர்த்தனையில் தியாகராஜர் விவரிக்கிறார்

Cogito said...

Good review. Btw, I am curious about the young couple who are supposed to Sing next yr !

தி. ரா. ச.(T.R.C.) said...

@cogito you are curious but we are all anxious how that will happen?however that teacher can take classes on the subject of Risk Management,