Wednesday, January 03, 2007

கைவிடமாட்டான் கனகசபேசன்




இன்று ஆருத்ரா தரிசனம். அம்பலகூத்தன் நடராஜனுக்கு மிகவும் உகந்த நாள். மார்கழிப் பௌர்ணமியுடன் கூடிய திருவாதிரை நாளில் நடைபெறும் திருவாதிரை விழாவை `ஆருத்ரா தரிசனம் என்பர். `ஆருத்ரா' என்ற சொல் `ஆதிரை' என்று மாறியது

வீட்டில் திருவாதிரைக் களியும் கதம்பகூட்டும் தயார் செய்து சாப்பிடுவார்கள். ஒருமுறை சேந்தனார் அளித்த களியை சிவன் ஏற்றுகொண்டார். அன்றிலிருந்து திருவாதிரைக்கு களியும் ஏழுவகைக்கூட்டும் அவித்த வள்ளிக்கிழங்கும் நைவேத்யமாகக் கொள்ளப்பட்டது. களி' என்றால் `ஆனந்தம்' என்பது பொருள். இறைவன் சச்சிதானந்த வடிவினன். அவனுக்கு ஆனந்த நடனப் பிரகாசம், ஆனந்த நடராஜன் என்ற ஒரு பெயரும் உண்டு. களி நடனம் புரியும் அவனுக்குக் களியைப் படைத்து நாமும் களிப்படைவதும் பொருத்தமே.

நாட்டில் நடராஜருக்கு முக்கியமாக ஐந்து நடனசபைகள் உண்டு.
திருவாலங்காடு(ரத்தின சபை),சிதம்பரம்(கனக சபை),திருநெல்வேலி(தாமிர சபை),மதுரை(வெள்ளி சபை),குற்றாலம்(சித்ர சபை) ஆகும்.
சிதம்பரத்துக்கு கனகசபை என்று பெயர்வரக் காரணம் அங்கே நடராஜர் எழுந்தருளியிருக்கும் மண்டபம் பராந்தக சோழனால் பொன்னால் வேயப்பட்டது.நடராஜர் எட்டுகைகளுடன் இடது பதம் தூக்கி ஆடுவார் மதுரையைத்தவிர மற்ற இடங்களில். மதுரையிலோ வலது பாதம் தூக்கி ஆடுகின்றார் பத்து கைகளுடன்.

கோபலகிருஷ்ண பாரதியார் தனது நந்தானார் சரித்திரத்தில் பல அருமையான பாடல்களில் தில்லை நடராஜனின் குணங்களையும் நந்தனாரது எளிமையான திட பக்தியையும் போற்றிப் பாடியுள்ளார். இவர் தியாராஜஸ்வாமிகளின் சமகாலத்தவர்.நந்தன் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர்.நடராஜனை ஆருத்ராதரிசனத்தன்று பார்க்கவேண்டும் என்று பல வருடங்களாக காத்திருப்பவர்.அவருடைய எஜமான் உத்தரவு தரவில்லை.அப்படிப்பட்ட வரை நடராஜன் தன் கருணையால் இந்த ஆருத்ரா அன்று ஆட்கொண்டு தன்னோடு ஐக்கியமாக்கிக் கொள்கிறான். தில்லை
வாழ் அந்தணர்களுக்கும் கிடைக்காத பேரின்பத்தை வழங்குகிறான்.உண்மையான பக்தி ஒன்றுக்கு மட்டும்தான் அவன் வசப்படுவான் என்ற உண்மையையும் நமக்கு புலப்படுத்துகிறான்

நந்தன் கனவில் கனகசபேசன்வந்து நான் உன்னை பொன்னம்பலத்திற்கு வரச்செய்து தரிசனம் தருகிறேன் என்று உறுதி மொழிகொடுத்தும் நந்தனுக்கு சந்தேகம் தீரவில்லை.ஏனென்றால் இத்தனை நாள் தன்னை கோவிலுக்குள் நுழையவிடாத சமூகமும் எஜாமனரும் அனுமதிபார்களா என்ற பயம். அதைப் பாட்டாக வெளிப்படுத்துகிறான். கோபலகிருஷ்ண பாரதியாரும் ஒரு அடிமையின் உணர்ச்சிகளுக்கு ஏற்றவாறு கருணாரசம் பொங்கும் மாஞ்சி ராகத்தை சமயத்திற்கு ஏற்ற மாதிரி அமைத்துள்ளார்.

ராகம்:- மாஞ்சி தாளம் :- மிஸ்ர சாபு

பல்லவி

வருகலாமோ ஐய்யா--- நான் உந்தன் அருகில்
நின்று கொண்டாடவும் பாடவும் நான் அங்கே வருகலாமோ

அனுபல்லவி

பரமகிருபாநிதி அல்லவோ----நீ
இந்த நந்தன் உபசாரம் சொல்லவோ
உந்தன் பரமானந்த தாண்டவம் பார்க்காவே நான் அங்கே (வருகலாமோ)

சரணம்

பூமியில் புலையனாய் பிறந்தேனே-- நான்
ஒரு புண்ணீயம் செய்யாமல் இருந்தேனே
என் ஸ்வாமி உந்தன் சந்நிதி வந்தேனே
பவசாகரம் தன்னையும் கடந்தேனே
கரை கடந்தேனே
சரணம் அடைந்தேனே
தில்லை வரதா பரிதாபமும் பாவமும் தீரவே -----(வருகலாமோ)

கண்களில் கண்ணீரை பெருகச்செய்யும் பாடலை திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன் உருகி உருகி பாடியிருப்பதைக் கேளுங்கள்.

கிளிக் <"இங்கே">


சரி நம் தமிழ்த்தியாகைய்யா திரு பாபநாசம் சிவன் மட்டும் சும்மா இருந்து விடுவாரா என்ன. ஆருத்ரா தரிசனத்தன்று நராஜன் ஆடும் ஆட்டத்தையே தன் பாட்டில் அழகான தமிழில் கொஞ்சவைக்கும் யதுகுலகாம்போதியில் குழைந்தும் குழைத்தும் அளிக்கிறார். பாட்டை முதலில் பார்த்துவிட்டு பிறகு கேட்போம்.

ராகம்:-யதுகுலகாம்போதி தாளம்:- ஆதி

பல்லவி

காலைத்தூக்கி நின்றாடும் தெய்வமே---
என்னை கைதூக்கி ஆட்கொள் தெய்வமே ஒரு....................(காலைத்தூக்கி)

அனுபல்லவி

வேலைத்தூக்கும் பிள்ளைதனைப் பெற்ற தெய்வமே
மின்னும் புகழ்சேர் தில்லை பொன்னம்பலத்தில் ஒரு..(காலைத்தூக்கி)

சரணம்

செங்கையில் மான் தூக்கி சிவந்த மழுவும் தூக்கி
அங்கம் சேர் ஒரு பெண்ணை அனுதினமும் தூக்கி
கங்கையை திங்களை கருத்த சடையில் தூக்கி
இங்கும் அங்குமாய்த் தேடி இருவர் கண்டறியாத........(காலைத்தூக்கி)

நந்தி மத்தளம் கூட்ட நாரதர் யாழ் தூக்க
தோம் தோம் என்று என் தாளம் சுருதியோடு தூக்க
சிந்தை மகிழ்ந்து வானோர் சென்னிமேல் கரம் தூக்க
முந்தும் வலியுடைய முயலகன் உன்னைத் தூக்க


அஹா என்ன ஒரு வர்ணனை.பாட்டைக் கேட்கும்போதே நடராஜரை முழுமையாகப் பார்த்துவிடலாம்.ஏம்பா நடராஜா நீ காலைத்தானே தூக்கிக் கொண்டு இருக்கிறாய் கை சும்மாதானே இருக்கு என்னை அதாலே தூக்கிவிடேன் என்கிறார்.முருகனைப் பெற்றதால்தான் உனக்கு பெருமை என்கிறார்.உடம்பெல்லாம் என்ன இருக்கு தெரியுமா கையில் மான் மற்றொரு கையில் நெருப்பு, கருத்த சடையில் கங்கை,சந்திரன் இதெல்லாம் போறாதுன்னு உன்னோடு இரண்டறக்கலந்து இருக்கும் பார்வதியை சதாசர்வகாலமும் தூக்கிக்கொண்டு இருக்கிறாயே. எந்தகாலைதூக்கி ஆடுகிறாய் தெரியுமா பிரும்மாவும் விஷ்ணுவும் தேடித் தேடி பாதளத்திற்கும் ஆகயத்திற்கும் இங்கும் அங்குமாய் ஓடி கண்டு பிடிக்க காண முடியாமல் இருக்கும் அந்தக் கால் அல்லவா அது. ஹரி ஐயனும் காணா அரிய ஜோதி ஆதி அந்தம் இல்லாத பழமனாதி.

சரி இத்தனையும் தூக்கிகொண்டு சும்மாவாய் இருக்கிறாய். இல்லையே நந்தியின் தாளத்திற்கும் நாரதரின் யாழிசைக்கும் தோம் தோம் என்று என்னுடய (பாபநாசம் சிவனுடைய) தாளம் சுருதியோடு தூக்க உன்னுடைய அஜபா நடனத்தின் தன்மையை அறிந்த தேவர்கள் மகிழ்ச்சியோடு தாங்கள் தலைக்குமேல் இருகைகளையும் தூக்கிக்கொண்டு இருக்க உன்காலின் கீழ் அகப்பட்டுக் கொண்டு இருக்கும் அரக்கனான முயலகன் வலியோடு உன்னைத்தூக்க நீ ஆடும் ஆட்டம் எப்படி இருக்கிறது தெரியுமா? என்று மகிழ்ந்து போகிறார். சிறிது ஹாஸ்யபாவத்தையும் இங்கே காட்டுகிறார்.மான், மழு,கங்கை,சந்திரன்,பார்வதி இத்தனை பேரை தூக்குகின்றாயே என்னை கைதூக்கி ஆட்கொள்ளுவது உனக்கு ஒரு பெரிய விஷயமா என்றும் கேட்பதுபோல் உள்ளது

சரி இப்போது திருமதி. சுதா ரகுநாதன் அனுபவித்து பாடிய பாட்டைக் கேட்கலாமா?
கிளிக்<"இங்கே">

28 comments:

EarthlyTraveler said...

என்ன சொல்ல? அருமையா இரண்டு பாடல்கள்.அதற்கு விளக்கம். பாடல்கள் கேட்க லிங்க்.என்னைப் போன்ற அறிவிலாதார்க்கும் விளக்கம் புரியும் வண்ணம் உங்கள் எழுத்து.நன்றி.--SKM

ஷைலஜா said...

சுதாவும் நித்ய ஸ்ரீயும் கண்முன் பரமேஸ்வரனைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டார்கள்.
உங்கள் சிறப்பு விமர்சனம் படிக்கசுவை ஆருத்ராதினக்களி போல!
ஷைலஜா

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இன்றோ திருவாதிரை ஆருத்ரா!
இன்றோ எம் ஈசனுக்கு விடிய விடிய திருமுழுக்கு!

இன்றோ தில்லையில் ஈசன் திருமேனி கருவறை நீங்கி, வீதியில் நம்மைக் கடைத்தேற்ற வருகிறது!

இன்றோ மணிவாசகர் ஈசனார் முன் பாடலாய்ப் பொழிய, ஒவ்வொரு பாட்டுக்கும் ஈசன் ஜோதி தரிசனம் தருகிறான்!

இன்றோ சிவதாண்டவம் தில்லையில் மீண்டும் நிகழ்த்தப்படுகிறது!

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வேலைத்தூக்கும் பிள்ளைக்கு அப்பன்
காலைத்தூக்கி ஆடும் ஆருத்ரா தரிசனத்தைப் பாட்டாலே செய்து வைத்த திராச ஐயா! உங்களுக்கு நன்றிகள் பல!

Chinnakutti said...

இத்துனை ஆண்டுகள் சிதம்பரத்தில் இருந்தும் தோன்றாத எண்ணம் உங்கள் பதிவை படித்து தோன்றியது. கண்டிப்பாக ஒரு ஆருத்ரா தரிசனம் காண வேண்டும்.

தி. ரா. ச.(T.R.C.) said...

ஸ்.கே.எம் உங்களுடைய பதிலில் உங்களின் பணிவு தெரிகிறது. வள்ளளார் தன் நடராஜப் பத்து என்ற படலில் சபேசனை கல்லார்க்கும் கற்றார்க்கும் நடு நின்ற நடுவே என்கிறார்.இந்த விஷயத்தில் என்னை சிறுவயதிலேயே ஆதரித்தவர் என் தாயார்தான்.இந்த மாதம் 8 ஆம் தேதி அவள் வரும்போது நன்றி சொல்லவேண்டும்.எனக்குத் தெரிந்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்கிறேன் அவ்வள்வுதான்.தங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

செல்லி said...

கோபலகிருஷ்ண பாரதியாரின் பாடல் உள்ளத்தை நெகிழச் செய்கிறது. நித்யசிறீயின் குரலும் பாடும்விதமும் அருமை.
பாபநாசம் சிவன் பாடலும் மிகவும் நன்றாயிருக்கிறது.ஆருத்திர தரிசனம் கண்டது போலிருந்தது. ந்ன்றி

தி. ரா. ச.(T.R.C.) said...

@ஷைலாஜா எனக்குத்தெரியும் பஞ்ச வர்ணக்கிளி தமிழுக்கும் பாட்டுக்கும் மயங்கி வரும் என்று.வருகைக்கு நன்றி.பாராட்டுக்கு நன்றி. ஆனாலும் எனக்கு உங்களைப் போல கவிதை எழுதவராது.ஆமாம் அருமையாக பாடியிருக்கிறார்கள் சுதாவும் நித்யஸ்ரீயும்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@கே.ஆர்.ஸ். ஆமாம் இன்றுதான் நடராஜன் உலா வரும் நாள். காலையில் சரியாக 11.00 மணிக்கு அந்த ரத்ன சபாபதியை வெளியில் வைத்து பூஜை செய்து பின் கற்பூரம் காட்டும்போது அதிலும் பின் பக்கம் காட்டும்போதுதான் முன்பக்கம் இறைவன் சிவப்பாக ஒளிர்வான். அந்தகாட்சியைப் பார்க்க பார்க்க திகட்டுமோ அவன் தரிசனம்.பதிலுக்கும் வருகைக்கும் நன்றி.அரங்கனையும் மலையப்பனையும் நீங்கள் குத்தகை எடுத்து விட்டதால் நான் வருகலாமோ என்று கேட்டதற்க்கு நடராஜன்தான் என்னை கைகொடுத்து தூக்கிவிட்டான். அதனாலென்ன "ஹரியும் ஹரனும் ஒன்றே இதை அறியாதவர் உண்டோ. பன்னக சயனன் ஹரி பன்னகாபரணன் ஹரன்".

மெளலி (மதுரையம்பதி) said...

நன்றி சார்...

பதிவும், பாடல்களும் அருமை.

"இடது பதம் தூக்கியாடும் நடராஜனடி பணிவோமே....."

மெளலி....

தி. ரா. ச.(T.R.C.) said...

@சின்னகுட்டி என்ன இப்படி செய்து விட்டீர்கள்.Nearer to the temple but faraway from the God என்பார்களே அந்த மாதிரி இருக்கிறது. நந்தனார் மாதிரி வருகலாமோ எல்லாம் பாடவேண்டாம் நேராகச்செல்லுங்கள் இப்பொழுதே. வருகைக்கு நன்றி

தி. ரா. ச.(T.R.C.) said...

@வேதா அனந்த பத்மநாபஸ்வாமியை மூன்று வாயில்களிலும் பார்த்து வந்துவிட்டீர்கள் போல இருக்கிறது.ஒரு பதிவு போடுங்கள்.

Geetha Sambasivam said...

நடராஜரைப் பத்தியும், நாட்டியத்தைப் பத்தியும் நல்லா விளக்கமா எழுதிட்டீங்க, நான் எழுதலாம்னு இருந்தேன், நீங்க முந்திட்டீங்க. நல்லா இருக்கு. இவ்வளவு நல்லாப் படங்களும் போட்டுப் பாட்டுக்களும் போட்டு எனக்கு வராது. உங்க பதிவும் அருமை, பாட்டுக்களும் அருமை. நல்லா இருக்கு. ரொம்ப நன்றி.sivam

தி. ரா. ச.(T.R.C.) said...

@செல்லி வாருங்கள். சங்கீதத்தின் சிறப்பே அதுதான். காட்சிகளை அப்படியே கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்திவிடுவார்கள் தங்கள் பாட்டின் மூலமாகவும் பாடுபவரின் குரல் மூலமாகவும்.உங்கள் பதிவை சீர்செய்து விட்டீர்கள் போல இருக்கிறது அழகான படத்தைப்போட்டு.உங்கள் கவிதை திறனுக்கு பாராட்டுக்கள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@மௌலி.நாம் இருவருக்கும் பெயர்ப் பொருத்த போலும் சந்திரமௌலி சந்திரசேகரன் இரண்டும் ஒருவர்தான்.ஆதரவுக்கு நன்றி.நடராஜனின் குஞ்சிதபாதத்தைப் பற்றி
வள்ளாளார் பெருமான் கூறுவதையும் கேள்ங்கள்.
எழுவகைப் பிறவிகளுள் எப்பிறவி எய்துகினும் (81)
எய்துகபி றப்பில்இனிநான் (82)
எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் (83)
இன்பம்எய் தினும்எய்துக (84)
வழுவகைத் துன்பமே வந்திடினும் வருகமிகு (85)
வாழ்வுவந் திடினும்வருக (86)
வறுமைவரு கினும்வருக மதிவரினும் வருகஅவ (87)
மதிவரினும் வருகஉயர்வோ (88)
டிழிவகைத் துலகின்மற் றெதுவரினும் வருகஅல (89)
தெதுபோ கினும்போகநின் (90)
இணையடிகள் மறவாத மனம்ஒன்று மாத்திரம் (91)
எனக்கடைதல் வேண்டும்அரசே (92)
கழிவகைப் பவரோக நீக்கும்நல் லருள்எனும் (93)
கதிமருந் துதவுநிதியே (94)
கனகஅம் பலநாத கருணையங் கணபோத (95)
கமலகுஞ் சிதபாதனே (96

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதாமேடம் நீங்கள் வந்து வாழ்த்தியது அந்த சாம்பசிவமே வந்து வாழ்த்தியதுபோல இருக்கிறது.என் பதிவின் மிகக்அடியில் லின்க் உள்ளது அதில் விருப்பமிருந்தால் பதிவு செய்யுங்கள் பதிவ்ய் தானாக அறிவிப்பு வரும்.அம்பியை எங்கே காணோம் உங்களுக்கு பயந்துதான் இந்தபக்கமே வரலை போலிருக்கு

குமரன் (Kumaran) said...

இரண்டு நல்ல பாடல்களை அறிமுகப்படித்தியதற்கு நன்றி தி.ரா.ச. ஐயா. பாடலைக் கேட்டு அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். பாடல்களுக்கு நீங்கள் தந்த உரையும் மிக நன்றாக இருக்கிறது.

எங்களுக்கு இன்று தான் திருவாதிரைத் திருநாள். இன்று இப்பாடல்களைக் கேட்கும் படி செய்து புண்ணியம் தேடிக் கொண்டீர்கள். மிக்க நன்றி.

வல்லிசிம்ஹன் said...

தி.ரா.ச,
நன்றி சிவ தரிசனத்திற்கு.

உங்கள் படிவும் பின்னூட்டங்களும் தினமும் உங்கள் சொல்லுக்கேற்ப சத்சங்கம் கூடிய மாதிரி தான் இருக்கு.

சங்கர நாராயணர்கள் மாதம் தானே மார்கழி.!!
எங்கள் புதுப் பேரனும் திருவாதிரை நட்சத்திரம் தான்.

ரவி ஆடின கண்ணனைக் கூப்பிடுகிறார்.
நீங்கள் ஆடிய பாதத்தைச் சொல்லிவிட்டீர்கள்.
ஆகக் கூடி சிவாவிஷ்ணு கோவிலுக்குப் போன புண்ணியம் எனக்கு.

VSK said...

சிதம்பரத்தில் இருந்த அந்த 5 ஆண்டுகளும் தவறாது இந்த தரிசனத்தைக் கண்டிருக்கிறேன் ஐயா!

அத்தோடு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் அந்த ரத்தின சபாபதியின் ஜோதியையும் களித்திருக்கிறேன்!

இந்த இரு பாடல்களும் ஏற்கெனவே கேட்டவையே!

ஆயினும் இப்போது தங்கள் அழகு தமிழ் வண்ணத்தில் வர்ணனையுடன் படிக்கையில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஈடே இல்லை!

வளமான தமிழ்ச்சொல்லால் வாரி வழங்குகிறீர்கள்!

ஆடல்வல்லானை [ஆடவல்லான் அல்ல!] அடியேனுக்கு இந்த ஆருத்ராநாளில் அளித்ததற்கு அளவிலா நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

நேற்று இரவு வீட்டில் சிவனுக்கும் முருகனுக்கும் குளிரக் குளிர அபிஷேகம் செய்தேன்!

அதற்குப் பரிசு இன்று காலையில் கணினியைத் திறந்ததும் தங்கள் பதிவு!!

அற்புதம் என் சொல்வேன்!

நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க!

ambi said...

Excellant narration. nanthanar is also called "Thirunaalai povaar" correctaa sir..?

2 songs are my fvte one. unable to hear from office. will listen from webcafe later.

your comment is itslef a separate post sir!

sorry for putting a comment in english, work pressure, echoose me ejamaan! :)

தி. ரா. ச.(T.R.C.) said...

@@குமரன் வாருங்கள். உங்களிடமிருந்து இன்னும் விரிவான பதிலை எதிர்பார்த்தேன். சரி நன்றாக படித்துவிட்டு மறுபடியும் வாருங்கள் இரண்டு தடவை கேட்டாலும் அலுக்காத பாடல்கள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@@வல்லி அம்மா வாருங்கள். ஆடிய பாதத்தைத் தேடி ஆடிய கண்ணன் ஓடுகிறான்.ஆடிய கண்ணனின் நாமத்தை ஆடியபாதன் தினமும் ஜெபிக்கிறான்.மார்கழி மாதத்திற்கு மற்றொரு சிறப்பு ஷண்மத கடவுளர்க்கும் சிறப்பு வழிபாடு உண்டு.மாதம் முழுவதும் ஆண்டாளை சக்தியாக வழிபாடு.விஷ்ணுவுக்கு வைகுண்ட ஏகாதசி,சிவனுக்கு ஆருத்ரா தரிசனம்,முருகனுக்கு படித்திருவிழா 31 ஆம் தேதியன்று திருத்தணியில்,கணபதிக்கு சங்கடஹார சதுர்த்தி,கடைசியில் சூரியதேவனுக்கு பொங்கல் அன்று சிறப்பு பூஜை.

தி. ரா. ச.(T.R.C.) said...

@ஸ்.கே. வாருங்கள் தாங்கள் வந்து பின்னுட்டம் இட்டது ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்தது போல் இருக்கிறது.கொடுத்து வைத்தவர் நீங்கள் பலமுறை ரத்ன சபாபதியை கண்டு இருக்கிறீர்கள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

@அம்பி நீ சொல்வது சரிதான் நந்தானாருக்கு திருநாளைப்போவார் என்ற பெயரும் உண்டு.தன் வாழ்க்கையில் தில்லைக்கூத்தனை காணும் திருவாதிரைநாளை என்று போவோமோ என்று ஏங்கியே காலத்தை கழித்ததால் அவருக்கு அந்தப்பெயர் வந்தது.எடுத்துக்கொடுத்ததற்கு நன்றி.நீதான் குழந்தைதானே எனவே நீ எந்த பாஷையில் சொன்னலும் ஏற்றுக்கொள்ளப்படும்.அதுவும் இப்போ உனக்கு பல வேலைகள் நீ பிளாக்குக்குவரதே பெரிய விஷயம்.எதுக்கும் ரயில்வேயில் விசாரி சென்னை பங்களூருக்கு சீசன் டிக்கெட் இருக்கிறதா என்று. ரெண்டு வாரமா சென்னையில் கடலைமாவு வியாபாரம் ரொம்ப டல்லாம்.

இலவசக்கொத்தனார் said...

வருகலாமோ படலை கேட்டு உருகலாமோ. :)) என்ன அருமையான பாடல். என்.டி.ஆர் குரலில் கொடுப்பீர்கள் எனப்பார்த்து ஏமாந்து போனேன். நீங்கள் நடராஜ பத்தைப் பற்றியும் சொல்லி விட்டீர்கள். அதில் வரும் சிவனின் ஆடல் வர்ணனைக்கு ஈடு ஏது?

மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட,
மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரம்மனாட,
கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட,குஞ்சர முகத்தனாட,
குண்டலமிரண்டாட தண்டைபுலியுடையாட, குழந்தை முருகேசனாட,
ஞானசம்பந்தரொடு யிந்திராதி பதினெட்டு முனியட்ட பாலகருமாட,
நரை தும்பை யறுகாட நந்திவாகனமாட, நாட்டியப் பெண்களாட,
வினையோட உனைப்பாட யெனைநாடியிதுவேளை
விருதோடு ஆடிவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே.

இதை நம்ம சஞ்சய் பாடி கேட்டா அப்போதான் புரியும் இதைப் பார்க்க நந்தனார் ஏன் அப்படி உருகினார் என்று.

Octobervision said...

Ayya, I have read your blog with great interest as I am a devotee of Thillai Ambalavanan and am always looking for more and more songs relating to Natarajar & Thillai. However, all the music experts that I have heard and many of the CDs referred to in the discussions, credit this song, Kaalai Thookki.. to Marimutha Pillai and not to the very talented, and most prolific Thiru. Papanasam Sivan. Would you care to comment on this? Regards,
Balasubramaniam

திரு.தனம் said...

ஐயா,
மிக்க அருமையான பதிவு- நன்றி

//நடராஜர் எட்டுகைகளுடன் இடது பதம் தூக்கி ஆடுவார்//
என்று சொல்லி இருக்கிறீர்கள்- இந்தக் குருடனுக்கு நாலு கை தானே தெரியுது?
அருளும் பாதத்தை சுட்டிய ஒரு கை, உடுக்குடன் ஒரு கை, தீ ஏந்திய ஒரு கை, அஞ்சேல் என்று அபயம் தரும் ஒரு கை. மற்ற நாலு கைகளையும் காட்டுனீங்க்ன்னா என் மனசுல இத்தனை நாள் "எண் தோள் முக்கண்ணண்" என்னும் தொடர் புரியாமல் இருந்தது நீங்கும்.

தயவு செய்து முட்டாள் கேள்விகளை மன்னித்து விளக்கனும்

அன்புடன் தனம்

Sethu Subramanian said...

"காலைத் தூக்கி .." பாடல் எழுதியவர் மாரிமுத்தா பிள்ளை. பாபநாசம் சிவன் அல்ல.